மீண்டும் வருகிறது ஏவிஎம்.. ஓடிடி தளத்திற்காக பிரத்யேக தயாரிப்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: தமிழ் சினிமாவின் பழம் பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் மீண்டும் தயாரிப்பு பணியில் இறங்கியுள்ளது.
ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரால் 1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சினிமா தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் சிவாஜி கணேசன், ராஜ்குமார், எஸ்எஸ்ஆர், வைஜேந்திமாலா, கமல்ஹாசன் என பல நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஏவிஎம் நிறுவனம்.

பல தொழில்கள்
ஏவிஎம் நிறுவனம் பட தயாரிப்பு மட்டுமின்றி படப்பிடிப்பு தளம், ரெக்கார்டிங் ஸ்டுடியோ, டப்பிங் தியேட்டர், பிரிவியூ தியேட்டர் என சினிமா சார்ந்த மற்ற தொழில்முறைகளையும் மேற்கொண்டுள்ளது.

இதுவும் கடந்து போகும்
ஏவிஎம் மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு அவரது மகனான ஏவிஎம் சரவணன் ஏவிஎம் புரெடெக்ஷன் நிறுவனத்தை ஏவிஎம் சரவணன் நிர்வகித்து வருகிறார். கடைசியாக ஏவிஎம் நிறுவனம் இதுவும் கடந்து போகும் என்ற படத்தை தயாரித்தது.

சற்று விலகி..
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹீரோக்கள் அதிகம் சம்பளம் கேட்பதால் கட்டுப்படியாகவில்லை என்று கூறிய ஏவிஎம் சரவணன், அதற்கேற்றார் போல் தன்னை தயார் படுத்திக்கொண்டு சினிமாவுக்கு வருகிறேன் என்றார். அதுவரை சினிமாவில் இருந்து சற்று விலகியிருக்க போவதாக கூறியிருந்தார்.

திருட்டு விசிடி
இந்நிலையில் ஏவிஎம் நிறுவனம் தற்போது மீண்டும் தயாரிப்பு பணியில் இறங்கியுள்ளது. சோனி லைவ் ஓடிடி தளத்திற்கான படத்தை தயாரிக்கிறது ஏவிஎம் நிறுவனம். திருட்டு விசிடி கதையை மைய்யப்படுத்தி த்ரில்லர் படத்தை தயாரிக்கவுள்ளது ஏவிஎம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தப் படத்தை ஈரம், வல்லினம் படங்களை இயக்கிய இயக்குநர் அறிவழகன் இயக்கவுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏவிஎம் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ஏவிஎம் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை பார்த்த நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











