பாகுபலி 2: தீயாய் வேலைசெய்யும் ராஜமௌலி
ஹைதராபாத்: பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பாகுபலி 2 படத்தை தற்போது எடுத்து வருகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி.
முதல் பாகத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்வியுடன் படத்தை முடித்திருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் பாகுபலி படத்தின் 2 ம் பாகத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் முதல் பாகத்தை விடவும் 2 வது பாகத்தை பிரமாண்டமாக எடுத்து வெளியிட இயக்குநர் ராஜமௌலி முடிவு செய்து அதற்காக இரவு பகலாக உழைத்து வருகிறார்.

பாகுபலி
3 வருடங்கள் தனது ஒட்டுமொத்த உழைப்பையும் கொட்டி இந்தப் படத்தை இயக்கியிருந்தார் ராஜமௌலி. கதாபாத்திர தேர்வு முதல் சின்ன சின்ன விஷயங்களிலும் அவர் மிகுந்த அக்கறை எடுத்து பாகுபலியை உருவாக்கி இருந்தார். படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் கூட அதனை மறந்து ரசிகர்களை படத்துடன் ஒன்ற வைத்ததில் இயக்குனரின் பங்கு அதிகமிருந்தது.

பாகுபலி 2
பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து பாகுபலி 2 படத்தை தற்போது உருவாக்கி வரும் ராஜமௌலி, முதல் பாகத்தை விடவும் 2 வது பாகத்தை அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக எடுத்து வருகிறார். 2016ல் படத்தின் ஷூட்டிங்கை முடித்து கோடை விடுமுறை தினத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

புதிய நட்சத்திரங்கள்
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா தவிர்த்து இன்னும் சில புதிய நட்சத்திரங்களை படத்தில் அறிமுகம் செய்கிறார் ராஜமௌலி, இதற்கான நட்சத்திரத் தேர்வும் தற்போது நடந்து வருகிறதாம்.முதல் பாகத்தை விட 2 வது பாகத்தில் விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் பார்வையாளர்களை உணர்ச்சி வசப்படுத்தும் காட்சிகள் அதிகம் இருக்குமாம்.
பிரமாண்ட அரங்குகள்
பாகுபலி 2 வுக்காக பிரமாண்ட அரங்குகளை அமைக்க முடிவு செய்து அதற்காக படக்குழுவினரிடம் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகிறார் ராஜமௌலி. இயக்குநர் கலந்துரையாடும் காட்சியை பாகுபலி படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கின்றனர்.

கதாபாத்திரங்களின் தன்மை
முதல் பாகத்தில் பார்த்த அதே கதாபாத்திரங்கள் 2 வது பாகத்திலும் மாறாது ஆனால் கதாபாத்திரங்களின் தன்மை இந்தப் படத்தில் மாறுபடும்.மேலும் மக்கள் 2வது பாகத்தை பார்க்க எதிர்பார்ப்புடன் வருவார்கள், அவர்களின் எதிர்பார்ப்பை படம் கண்டிப்பாக நிறைவேற்றும் என்று படத்தின் இயக்குநர் ராஜமௌலி பூசான் சர்வதேசத் திரைப்பட விழாவில் தெரிவித்திருக்கிறார்.

கட்டப்பா vs பாகுபலி
பாகுபலி படத்தை விடவும் மக்கள் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பதுதான். இந்தக் கேள்விக்கான விடை 2 வது பாகத்தில் இருப்பதால் மக்கள் பாகுபலி 2 படத்தைக் காண மிகுந்த ஆவல் கொண்டுள்ளனர். இந்த ஒரு கேள்வியை வைத்து முதல் பாகத்தை விடவும் 2 வது பாகத்தில் நிறைய கல்லா கட்ட முடிவு செய்திருக்கிறார் ராஜமௌலி.


Click it and Unblock the Notifications











