நடிகர் டூ டைரக்டர்...தொட்டதெல்லாம் தூள் கிளப்பும் எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்
சென்னை : நடிகராக வேண்டும் என சினிமாவிற்கு வந்து டைரக்டராக சாதித்து, பிறகு நடிகராகவும் சாதித்தவர் எஸ்.ஜே.சூர்யா. அவர் இன்று தனது 54 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் டைரக்டர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் என அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்கு பல துறைகளிலும் தடம் பதித்து, அவற்றில் வெற்றியும் பெற்றுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி சினிமா உலகிலும் புகழ்பெற்றவராக வலம் வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இவரை பற்றி தெரியாத பல விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

எஸ்.ஜே.சூர்யா பெயர் ரகசியம்
எஸ்.ஜே.சூர்யா என்பது இவரின் உண்மையான பெயர் கிடையாது.எஸ் மட்டும் தான் இவரின் இன்சியல். இவரின் உண்மையான பெயர் எஸ்.ஜஸ்டின் செல்வராஜ்.இதை சுருக்கி தான் எஸ்.ஜே என குறிப்பிடுகிறார். சினிமாவிற்காக வைத்துக் கொண்ட பெயர் தான் சூர்யா.

சினிமாவிற்கு வந்தது எப்படி
ஆரம்பத்தில் ஓட்டலில் வேலை செய்த எஸ்.ஜே.சூர்யாவை சினிமாவிற்கு அழைத்து வந்தவர் கே.பாக்யராஜ் தான். அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த எஸ்.ஜே.சூர்யாவிற்கு முதலில் கொடுக்கப்பட்ட வேலை ஹீரோக்களுக்கு கதை சொல்வது தான். உல்லாசம் படத்திலேயே எஸ்.ஜே.சூர்யா கதை சொல்லும் விதம் அஜித்திற்கு பிடித்து விட்டது. ஆசை படத்தில் நல்ல நண்பர்கள் ஆகி விட்டனர். இந்த நட்பின் அடிப்படையில் தான் அஜித், எஸ்.ஜே.சூர்யா கேட்டதும் வாலி படத்தில் நடித்தார்.

நடிகராக வந்து டைரக்டரானவர்
நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்கு வந்த எஸ்.ஜே.சூர்யா, நெத்தியடி படத்தில் சிறிய ரோலில் நடித்தார். அதற்கு பிறகு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் டைரக்டராக முடிவு செய்து, வசந்த் மற்றும் சபாபதி ஆகியோரிடம் அசிஸ்டென்டாக சேர்ந்தார். நடிப்பின் மீதான எஸ்.ஜே.சூர்யாவின் ஆர்வத்தை பார்த்து டைரக்டர் வசந்த் ஆசை படத்திலும் சிறிய ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

முதல் படமே ஹிட்
அஜித் நடித்த ஆசை படத்தில் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றிய எஸ்.ஜே.சூர்யா, அடுத்ததாக அஜித்தை வைத்து வாலி படத்தை இயக்கினார். அதுவரை காதல் மன்னனாக வலம் வந்த அஜித்தை வில்லனாக காட்டிய பெருமை எஸ்.ஜே.சூர்யாவை தான் சேரும். வாலி, குஷி, நியு என வரிசையாக ஹிட் கொடுத்தார் எஸ்.ஜே.சூர்யா.நியு படத்தை தானே இயக்கி, அதில் ஹீரோவாக அறிமுகமானார்.
ஹீரோ அவதாரம்
நியு படத்தில் சிம்ரனுடன் ஜோடியாக நடித்து ஹீரோ அவதாரம் எடுத்த எஸ்.ஜே.சூர்யாவிற்கு முதல் படம் கைகொடுத்தது. அதற்கு பிறகு அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, வியாபாரி போன்ற படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன. 3 ஆண்டுகள் பிரேகிற்கு பிறகு நண்பன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அதற்கு பிறகும் சில படங்களில் கெஸ்ட் ரோலில் மட்டும் நடித்தார்.

மாஸ் காட்டிய வில்லன் முகம்
எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில் ஸ்பைடர் படத்தில் வில்லனாக அறிமுகமாகி அனைவரையும் கவர்ந்தார். இவர் வில்லனாக நடித்த மெர்சல், மாநாடு, டான் என வரிசையாக அத்தனை படங்களும் ஹிட்டாகி வருகின்றன. அதுவும் ஜாலியான வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யாவின் மாஸ் ஹீரோக்களுக்கு இணையாக மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

பாடகர் எஸ்.ஜே.சூர்யாவை தெரியுமா
ஒரு டைரக்டராக, நடிகராக எஸ்.ஜே.சூர்யாவை அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் பாடகர், பாடலாசிரியர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. வாலி படத்தில் 'வானில் காயுதே வெண்ணிலா', வியாபாரி படத்தில் 'ஜுலை மாதத்தில்', நியுட்டனின் முன்றாம் விதி படத்தில் 'முதல் முறை', இசை படத்தில் 'புத்தாண்டின்', இறைவி படத்தில் 'ஒன்று ரெண்டு', நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் 'என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா' போன்ற பாடல்களை பாடியது எஸ்.ஜே.சூர்யா தான். இதே போல் சுந்தர புருஷன் படத்தில் 'செட்டப்ப மாத்தி', புருஷன் பொண்டாட்டி படத்தில் 'லாட்டரி எனக்கு' போன்ற பாடல்களை எழுதியதும் எஸ்.ஜே.சூர்யா தான்.

இசையமைப்பாளர்
Ishq Wala Love என்ற மராத்தி படத்திற்கும், இசை படத்திற்கும் இசையமைத்தவர் எஸ்.ஜே.சூர்யா தான். இது தவிர 144, ரெமோ படங்களில் வாய்ஸ் அப்பியரன்சும் கொடுத்துள்ளார்.

சிறந்த வில்லன்
ஸ்பைடர், மெர்சல் படங்களுக்காக எஸ்.ஜே.சூர்யாவிற்கு சிறந்த வில்லன் விருது கிடைத்தது. இருந்தாலும் சிறந்த வில்லனாக, ரசிகர்கள் மனதில் அழுத்தமான இடத்தை பெற்று தந்தது வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படம் தான். மாநாடு படத்தில் இவரின் நடிப்பை பார்த்த பிறகு தற்போது எஸ்.ஜே.சூர்யா படம் என்றாலே அதற்கு தனி வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

கைவசம் உள்ள படங்கள்
எஸ்.ஜே.சூர்யா தற்போது கடமையை செய், பொம்மை ஆகிய படங்களில் லீட் ரோலில் நடித்து வருகிறார். மார்க் ஆன்டனி படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இது தவிர இரவாகலாம், உயர்ந்த மனிதன், ஆர்சி 15 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு படத்திலும் எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











