வீரப்பன் தொடருக்குத் தடை
சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் சந்தனக்காடு என்ற மக்கள் டிவியின் தொடருக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மக்கள் டிவியில் வருகிற 26ம் தேதி முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தத் தொடர் ஒளிபரப்பானால் எனது இரு மகள்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும், அவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்று கூறிய வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, இத்தொடரின் இயக்குநர் கெளதமன் எனக்குத் தெரியாமலேயே எனது கணவர் குறித்ததுக் கூறிய தகவல்களை டேப் செய்து விட்டார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த தொடருக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், முத்துலட்சுமி சார்பில் சென்னை நகர கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி சடையாண்டி, இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
முன்னதாக முத்துலட்சுமி தாக்கல் செய்திருந்த மனுவில், சந்தனக்காடு தொடருக்கு 8வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த இடைக்காலத் தடை கடந்த செப்டம்பர் 17ம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்தத் தொடரால் எனது இரு மகள்களின் படிப்பும், எதிர்கால வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும். அவர்களது திருமணமும் பாதிக்கப்படும்.
எனது கணவர் குறித்த எந்தத் தகவலையும் எனது அனுமதி இல்லாமல் யாரும் வெளியிட முடியாது. எனவே தொடருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.


Click it and Unblock the Notifications











