கேஜிஎஃப் 2 போன்ற படங்கள் இளைஞர்களை கெடுக்கும்.. பெங்களூரு முன்னாள் கமிஷனர் ஆதங்கம்!
பெங்களூரு: ஒரு ரவுடியையோ கேங்ஸ்டரையோ ஹீரோவாக காட்டும் படங்கள் சமுதாயத்தில் நிச்சயம் இளைஞர்களை கெடுக்கும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் பெங்களூருவின் முன்னாள் கமிஷனரான பாஸ்கர் ராவ்.
ஹீரோக்கள் போலீஸ் ஆக நடிப்பதை விட டானாகவோ, பில்லாவாகவோ, கேங்ஸ்டராகவோ நடித்தால் அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகி விடுகிறது.
இந்நிலையில், கேஜிஎஃப் 2 படத்திற்கு எதிராக பாஸ்கர் ராவ் வைத்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

600 கோடி வசூல்
கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் 6 நாட்களில் உலகம் முழுவதும் 600 கோடி வசூல் ஈட்டி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்துள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இந்த அளவுக்கு ஹிட் அடிக்கும் என யாருமே எதிர்பார்க்காத நிலையில், அந்த படத்தின் ஹாலிவுட் தர மேக்கிங் தான் இத்தனை பெரிய வெற்றிக்கு காரணம் என்கின்றனர்.

கேங்ஸ்டருக்கெல்லாம் கேங்ஸ்டர்
கோலார் தங்க சுரங்கத்தில் நடந்த முறைகேடுகளை மையமாக வைத்து புனைவு கதையாக உருவாக்கப்பட்ட படம் தான் கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகம். அடுத்ததாக 3வது பாகத்திற்கும் லீடு கொடுத்துள்ளனர். இந்த படத்தில் கேங்ஸ்டருக்கெல்லாம் கேங்ஸ்டராக நடித்துள்ளார் ராக்கி பாய். அம்மாவின் ஆசைக்காக ஒரு சாதாரண சிறுவன் எப்படி ரவுடியாக மாறி ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தையே படைத்து இந்திய அரசின் எதிர்ப்பால் அழிகிறான் என்பது தான் படத்தின் கதை.

பிரதமர் அலுவலகத்திற்கே சென்று
ராமிகா சென் எனும் பிரதமர் கதாபாத்திரத்தில் ரவீணா டாண்டன் இந்த படத்தில் நடித்துள்ளார். பிரதமர் அலுவலகத்திற்கே சென்று அவரை மிரட்டுவதும், கிளைமேக்ஸில் பாராளுமன்றத்திற்கே சென்று ஒரு எம்.பி.யை சுட்டுக் கொல்வதும், போலீஸ் ஸ்டேஷனை தனி ஒரு ஆளாக பெரியம்மா என அழைக்கப்படும் மெஷின் கன் வைத்து சுட்டு துவம்சம் செய்வதும் என ஏகப்பட்ட வயலென்ஸ் காட்சிகள் தான் படம் முழுக்க நீடித்திருக்கும்.

கேஜிஎஃப் 2 படத்திற்கு எதிர்ப்பு
பில்லா, பாட்ஷா, கேஜிஎஃப் என ஏகப்பட்ட டான் படங்களை இந்திய சினிமா கொண்டாடியுள்ளது. அதற்கு எதிரான கருத்துக்களும் முன் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கேஜிஎஃப் 2 படத்திற்கு எதிராக பெங்களூருவின் முன்னாள் கமிஷனரும் தற்போது ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவருமான பாஸ்கர் ராவ் தனது காட்டமான கருத்தை முன் வைத்துள்ளார்.

இளைஞர்களை கெடுக்கும்
ரவுடிக்கள் மற்றும் கேங்ஸ்டர்களை ஹீரோவாக காட்டும் போக்கை சினிமா இயக்குநர்கள் கை விட வேண்டும் என்றும், கேஜிஎஃப் 2 போன்ற படங்கள் இளைஞர்கள் மனதில் தவறான விஷயத்தை விதைக்கும் என்றும் கூறியுள்ளார். தான் கமிஷனர் பொறுப்பில் இருக்கும் போது தண்டுபால்யா எனும் படத்தின் விழாவுக்கு அழைத்திருந்தனர். அந்த படம் ரிலீஸ் ஆன பின்னர், அதே போன்ற சில குற்ற வழக்குகள் பெங்களூருவில் அரங்கேறின.
Recommended Video

பொது சிந்தனை தேவை
வெறும் பொழுதுபோக்கிற்காக படம் எடுக்கிறேன் என இயக்குநர் நினைக்காமல் தமிழ் சினிமா மற்றும் மலையாள படங்களை போல கருத்துள்ள படங்களை எடுக்க வேண்டும் என்றும் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு பொது சிந்தனை மற்றும் இளைஞர்கள் மீதான அக்கறை தேவை என்றும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் வெளியான தீபிகா படுகோனின் கெஹ்ரியான் படத்திற்கு எதிராகவும் தனது விமர்சனத்தை முன் வைத்து இருந்தார் பாஸ்கர் ராவ்.


Click it and Unblock the Notifications











