நானும் பல்சர் சுனிலும் நண்பர்களா? இது அடுக்குமா? - கொதிக்கும் பாவனா
திருவனந்தபுரம்: என்னை கடத்திய குற்றவாளி பல்சர் சுனிலும், நானும் நண்பர்களாக இருந்தவர்கள் என்று கூறுபவர்கள் மீது வழக்குத் தொடர்வேன் என்று நடிகை பாவனா கூறினார்.
கடந்த பிப்ரவரி 17-ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார் நடிகை பாவனா.
இதுதொடர்பாக, பல்சர் சுனில் என்பவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில், பிரபல மலையாள கதாநாயகன் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதை அவர் மறுத்தார்.

திலீப் தொடர்பா?
அதே சமயத்தில், பல்சர் சுனிலின் நண்பர் ஒருவர், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக போலீசில் நடிகர் திலீப் புகார் செய்தார். இது தொடர்பாக திலீப் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாவனா அறிக்கை
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமைதி காத்து வந்த நடிகை பாவனா, நேற்று பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், "விசாரணையை பாதிக்கும் என்று போலீசார் கூறியதால்தான், நான் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்தேன். ஆனால், ஒரு நடிகர் தெரிவித்த கருத்து வேதனை அளித்ததால், பேச வேண்டியதாகி விட்டது.

கடத்தியவனுடன் நட்பா?
என்னை கடத்திய பல்சர் சுனிலும், நானும் ஏற்கனவே நண்பர்களாக இருந்தவர்கள் என்றும், எனவே, நண்பரை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் அந்த நடிகர் கூறி இருக்கிறார். இக்கருத்து என்னை வேதனைப்படுத்தி உள்ளது.

பயப்பட மாட்டேன்
இதுபோன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள் மீது நான் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக உள்ளேன்.

ஆதாரங்கள் இல்லை
இந்த வழக்கில் மேலும் பலரின் பெயர்கள் வெளியாகி உள்ளன. அதை ஊடகங்கள் மூலமே அறிந்தேன். அவர்கள் குற்றவாளியா? நிரபராதியா? என்று நிரூபிக்க என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. அதுபோல், யாரையும் காப்பாற்றும்படியோ, தண்டிக்கும்படியோ நான் போலீசிடம் சொன்னது இல்லை.
வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறது. போலீஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











