Bison Day 3 Box Office - பாக்ஸ் ஆஃபிஸில் முன்னேறும் துருவ் விக்ரம்.. பைசன் மூன்றாவது நாள் வசூல் என்ன?
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் பைசன் காளமாடன் திரைப்படம் மாரி செல்வராஜின் அடுத்த முக்கிய படைப்பாக வந்திருக்கிறது. பலராலும் இப்படம் கொண்டாடப்பட்டு ஹிட் என்ற ரிசல்ட்டை பெற்றுவிட்டது. இந்நிலையில் படம் வெளியாகி மூன்றாவது நாள் வசூலை பார்க்கையில் துருவ் விக்ரம் இந்த ரேஸில் மெல்ல முன்னேறிக்கொண்டிருப்பது தெரிகிறது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் பைசன் காளமாடன் திரைப்படம் கடந்த 17ஆம் தேதி வெளியானது. வழக்கமாக அவரது படம் வந்தாலே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்கும். அந்த எதிர்பார்ப்புடன் இப்படத்துக்கு சென்ற ரசிகர்களுக்கு திருப்தியே கிடைத்திருக்கிறது. கதை, திரைக்கதை ஆகிய இரண்டுமே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
துருவ் விக்ரமுக்கு நல்ல தொடக்கம்: இத்தனை வருடங்கள் காத்திருந்ததற்கு துருவ் விக்ரம் நல்லதொரு தொடக்கத்தை பெற்றிருக்கிறார். இந்தப் படத்திலிருந்து அவரது பயணம் கோலிவுட்டில் வீரியமிக்காதவே இருக்கும் என்று கருதப்படுகிறது. அவர் மட்டுமின்றி படத்தில் நடித்திருந்த பசுபதி, மதன் ஆகிய இரண்டு பேருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் விழாவில் பசுபதி ஏன் மதனை அவ்வளவு பாராட்டினார் என்பது படம் பார்க்கையில் தெரிகிறது.

முக்கியமான படம்: இந்தப் படமும் மாரி செல்வராஜ் கொடுத்த முக்கியமான படங்கள் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டது. ஏனெனில் இதுவரை சாதிய பாகுபாடு, ஆதிக்க சாதியினரின் அட்டூழியங்களை காட்டிவந்த மாரி; இரண்டு பேரின் பகை எப்படி ஊர் பகையாக, சாதி பகையாக மாறுகிறது என்பதையும், திறமை வாய்ந்த ஒருவரை எதற்குள்ளும் அடைக்கக்கூடாது என்பதையும் பாணியில் காண்பித்திருந்தது அனைவரிடமும் பாராட்டை வாங்கியிருக்கிறது.
எதிர்ப்புகள் வரத்தான் செய்கின்றன: வழக்கம்போல் இந்தப் படத்துக்கும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. சத்ரிய சான்றோர் படையினர் ஆர்ப்பாட்டம் நடத்தி; பைசன் பட இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தென் மாவட்டங்களில் பதற்றத்தை இயக்குநர் உருவாக்குகிறார் என்பது அவர்களது நிலைப்பாடு. ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பதை படம் ரிலீஸாகி மூன்றாவது நாளும் வரும் கூட்டம் உணர்த்துகிறது.
எவ்வளவு வசூல்: இந்நிலையில் படம் வெளியாகி மூன்றாவது நாளான நேற்று எவ்வளவு வசூல் ஆகியிருக்கிறது என்ற தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி இரண்டாவது நாளில் 3.30 கோடி ரூபாயையும், மூன்றாவது நாளில் 4.25 கோடி ரூபாயை அள்ளியிருப்பதாகவும் அந்த இணையதளம் தெரிவித்துள்ளது. இப்போதுவரை மொத்தம் இந்தியாவில் 10.10 கோடி ரூபாய் கலெக்ட் செய்திருக்கிறதாம். நாளுக்கு நாள் அதிகரிக்கும் வசூலை பார்க்கும்போது பாக்ஸ் ஆஃபிஸ் ரேஸில் துருவ் விக்ரம் மெல்ல முன்னேறுகிறார் என்பது தெரிகிறது. இந்தப் படத்தின் வெற்றி அவரது மார்க்கெட் வேல்யூவை அடுத்த படத்தில் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உண்டு.


Click it and Unblock the Notifications











