Bison Review: பைசனில் கேம் ஆடிய மாரி செல்வராஜ்.. விக்ரமை தூக்கி சாப்பிட்ட துருவ்.. செய்யாறு பாலு விமர்சனம்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, அமீர், லால் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பைசன். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரெடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டைமெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படம் பார்த்தவர்கள் படத்தை கொண்டாடி வரும் நிலையில், செய்யாறு பாலு தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " மணத்தி கணேஷனின் வாழ்க்கையை மையமாக கொண்டு புனைந்து உருவாக்கப்பட்ட படம் என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். பைசன் படம் ஒரு கபடி வீரனின் கதை, அதற்குள் மாரி என்ன சொல்கிறார் என்பதுதான் முக்கியமான விஷயம். பாதியில் இருந்து தான் படம் தொடங்குகிறது. ஜப்பானில் ஆசிய கபடி போட்டி நடைபெறுகிறது. அதில் அவர் முக்கியமான பிளேயராக உள்ளார். அவரது பார்வையில் படம் நகர்கிறது. துருவ் விக்ரம் ஜப்பானில் களமிறக்கப்படுவாரா? மாட்டாரா? என சின்ன கிராமமே காத்துக் கொண்டுள்ளது. ஆனால் துருவ் விக்ரமை ஒதுக்குகிறார்கள், அவரை உதாசீனப்படுத்துகிறார்கள்.

தென் மாவட்டத்தில் 90களில் இரண்டு பெரிய சாதிச் சங்கங்களுக்கு இடையிலான சண்டை, வெட்டு குத்து என இருக்கிறது. இதற்கு இடையில் உள்ள கிராமத்தில் இருந்து கபடி வீரனாக மாறுகிறார் துருவ் விக்ரம். இவருக்குள் இருக்கும் கபடி பிளேயரை ஒரு பி.டி. மாஸ்டர் கண்டுபிடிக்கிறார். தனது மகன் கபடி வீரனாக வந்தால் அது பெரும் பிரச்னையாக மாறிவிடும், எனவே வேண்டாம் என்கிறார் பசுபதி. படம் இங்கிருந்துதான் சாதிய பிரச்சனையை பேசுகிற படமாக மாறுகிறது. இந்த படத்தில் நேரடியாகவே இரண்டு சாதி மற்றும் சாதித் தலைவருக்கான சண்டையைக் காட்டுகிறார்.
பைசன் கதை: அமீர் மற்றும் லால் கதாபாத்திரங்கள் சாதிச் சங்கத் தலைவர்களின் கதாபாத்திரம். இவர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் பழி தீர்த்துக் கொள்வதற்காக தொடங்கப்பட்ட விஷயம். ஒரு சிறிய விஷயத்தில் தொடங்கும் பிரச்னை பெரிய சண்டையாக மாறுகிறது. இவ்வளவு பிரச்னைகளுக்கும் மத்தியில் ஒரு இளைஞனின் காதல், கபடி வீரனாகும் கனவு என்ன ஆனது என்பதுதான் கதை.

அட்டகாசமான கதாபாத்திரங்கள்: படத்தில் பல கதாபாத்திரங்கள் வருகிறது, அனைத்திற்கும் ஸ்கிரீன் ஸ்பேஸ் உள்ளது. குறிப்பாக பசுபதி, லால், அமீர், ரஜிஷா, அனுபமா, துருவ், பவன் என அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். மாரி செல்வராஜின் கதை சொல்லலும் சிறப்பாக உள்ளது. பசுபதி காளமாடன் எனும் காளையை வணங்குபவர். படம் முழுவதும் துருவ் விக்ரம் மிகப்பெரிய உழைப்பைப் போட்டுள்ளார். வணத்தி கிட்டாவாகவே மாறியுள்ளார், அவரை மாற்றியுள்ளார் மாரி. தனது தம்பி கபடி வீரனாக வேண்டும் என்று போகிற போக்கில் அழுத்தமான வசனங்களை ரஜிஷா சொல்லி உள்ளார்.
மாரியின் கேம்: அமீரையும் லாலையும் வைத்து பெரிய கேமே ஆடியுள்ளார் மாரி. துருவ் விக்ரம் ஆடுகிற கபடியை பார்த்து லால் பேசும் வசனத்தை பார்க்கும் போது அங்கு, இயக்குநர் சிறப்பாக கதையை பேலன்ஸ் செய்துள்ளார் என்று தெரிகிறது. இரண்டு பேர் மீதும் தவறு உள்ளது என்று மாரி சொன்ன விதம் அருமை. படம் தொடங்கி கடைசி வரை வெட்டு குத்து மாகத்தான் உள்ளது. ஒளிப்பதிவு அருமை. பின்னணி இசையும் பாடல்களும் பிரமாதம். படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். சில இடங்களில் துருவ் விக்ரமிடம் அவரது அப்பா விக்ரமின் சாயல் தெரிகிறது. பைசன் பார்க்க வேண்டிய படம்" என்று தெரிவித்துள்ளார். இவரது விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











