115 விருதுகளையும் கண்ணுல காட்டு... பார்த்திபனை வடிவேலு ரேஞ்சுக்கு கலாய்த்த ப்ளு சட்டை மாறன்...
சென்னை: பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் ஜூலை 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக வெளியான இரவின் நிழல், தற்போது சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
இதனையடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபன், இரவின் நிழல் திரைப்படம் 114 விருதுகளை வென்றுள்ளதாக கூறியிருந்தார்.

இரவின் நிழலும் சர்ச்சையும்
நடிகர், இயக்குநர் என கலக்கி வரும் பார்த்திபன், சமீபத்தில் இரவின் நிழல் படத்தை இயக்கியிருந்தார். உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாகியுள்ள இரவின் நிழல், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இரவின் நிழல் திரையரங்குகளைத் தொடர்ந்து அமேசானிலும் வெளியானது. ஆனால், இரவின் நிழல் முதல் நான்லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் இல்லை என ப்ளு சட்டை மாறன் விமர்சித்து இருந்தார். இதுதொடர்பாக பார்த்திபனும் ப்ளு சட்டை மாறனும் டிவிட்டரில் கடுமையாக மோதிக் கொண்டனர்.

இரவின் நிழலுக்கு 114 விருதுகள்
இந்நிலையில், தற்போது சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவிலும் இரவின் நிழல் திரையிடப்படுகிறது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பார்த்திபன், தான் இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் 114 விருதுகளை வாங்கியுள்ளதாக கூறினார். மேலும், சென்னை சர்வதே திரைப்பட விழாவில் திரையிடுவதும் எனக்கு பெருமை என பேசியிருந்தார். 21 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இரவின் நிழல், அவ்வளவு லாபம் கிடைத்ததா இல்லையா என்பதை பற்றி எனக்கு கவலையில்லை. அதேநேரம் இரவின் நிழல் திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களை சென்றடைந்துள்ளது எனவும் பேசினார்.

மீண்டும் வம்பிழுத்த ப்ளு சட்டை மாறன்
மேலும், நான் இதுவரை 3 சர்வதேச விருதுகளை வாங்கிவிட்டேன் இருந்தாலும் எனக்கு விருதுகளின் மீது உள்ள ஆசை இன்னமும் போகவில்லை என பார்த்திபன் கூறியிருந்தார். இதனையடுத்து தற்போது மீண்டும் அவரை வம்பிழுத்து ட்வீட் செய்துள்ளார் ப்ளு சட்டை மாறன். "எலே வீரபாகு... ஒருமாசமா.. 115 விருது வாங்கி இருக்கேன்னு தமிழக மக்கள் மற்றும் மீடியாகிட்ட கூசாம பொய் சொல்லிட்டு இருக்கியே. அதை மொத்தமா கண்ணுல காட்டு பாப்போம். அந்த 115 விருதுகளை குடுத்தவங்ககிட்ட பேட்டி எடுத்து போட முடியுமா? அதுல 90% உப்மா விருதுதான?" என கலாய்த்துள்ளார்.

வடிவேலு ரேஞ்சில் பங்கமான கலாய்
கிரி படத்தில் வீரபாகு கேரக்டரில் ந்டித்த வடிவேலுவிடம், "எலே வீரபாகு உங்க அக்காவ வச்சி தான் இந்த பேக்கரிய வாங்கினியாமே, அது உண்மையா, சீக்கிரம் சொல்லு... எனக்கு நிறைய வேலை இருக்குன்னு" ஒருவர் கேட்பதாக காமெடி சீன் வரும். அந்த காமெடிக் காட்சியின் ஸ்கீரின் ஷாட்டை டிவிட்டரில் ஷேர் செய்து, பார்த்திபனிடம் கேள்வி எழுப்பியுள்ளார் ப்ளு சட்டை மாறன். அவரின் இந்த டிவிட்டர் பதிவு நெட்டிசன்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் பலர் இது நியாயமான கேள்விதான் எனவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் ஆதரவு
அதில் ஒருவர், "சினிமா அரசியல் என எதுவாக இருந்தாலும் இது போன்று கேள்வி கேட்க ஆட்கள் தேவை தான். இல்லையெனில் தற்பெருமை பேசி, தனக்கு தானே பட்டம் கொடுத்துக்கொண்டு மக்களிடம் தங்களின் மாய பிம்பத்தை எளிதாக விற்றுவிடுவார்கள். ஆனால் கேள்விகளை நாகரீகமாக கேட்கலாம். ஒருமையில் பேசுவது சரியல்ல" எனவும் கமெண்ட் செய்துள்ளார். இந்நிலையில் ப்ளு சட்டை மாறனின் இந்த கேள்விக்கு பார்த்திபனின் பதில் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











