மருந்தாக மாறிய ‘செல்பி புள்ள’.. விஜய்யின் பஞ்ச் வசனங்களை கேட்டு குணமடையும் மாற்றுத்திறனாளி சிறுவன்!
நடிகர் விஜய்யின் பஞ்ச் வசனங்களை கேட்டு கேரளாவில் சிறுவன் ஒருவன் குணமடைந்து வருவது தெரிய வந்துள்ளது.
இடுக்கி: கேரளாவில் பிறவியிலேயே நடக்க, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனுக்கு மருத்துவர்கள் நடிகர் விஜய்யின் வசனங்களை கூறி சிகிச்சை அளித்து வருவது தெரிய வந்துள்ளது.
திரைப்படங்களில் நடிகர்கள் பேசும் வசனங்களை நாம் அவ்வப்போது நிஜ வாழ்க்கையில் பேசுவது வழக்கம் தான். சமயங்களில் வாழ்க்கையில் இக்கட்டான நேரங்களில் அவர்களது தன்னம்பிக்கை வசனங்கள் நமக்கு உத்வேகம் அளிப்பதுண்டு.

ஆனால் இவற்றிற்கெல்லாம் ஒரு படி மேலே போய், மருத்துவர்கள் நடிகர் விஜய்யின் பட வசனங்களை வைத்து சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனராம். அதுவும் தமிழகத்தில் இல்லை, கேரளாவில்.
கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த சிறுவன் செபாஸ்டியன். பிறவியிலேயே நடக்க, வாய் பேச முடியாத அச்சிறுவனுக்கு பல மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லையாம்.
எனவே, சிறுவனை அவனது பெற்றோர், இடுக்கியில் உள்ள பஞ்சகர்மா சிகிச்சை நிலையத்தில் அனுமதித்துள்ளனர். அங்கு ஒரு நாள் செல்போன் ஒன்றில் இருந்து "செல்ஃபி புள்ள" ரிங்டோனை கேட்ட சிறுவனிடம் அசைவுகள் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். அதன் தொடர்ச்சியாக விஜய் படங்கள் ஒளிபரப்பும் பொழுது, சிறுவனிடம் மாற்றத்தை கண்டுள்ளனர்.
இதனால், விஜய்யின் பட வசனங்களைக் காட்டி சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, விஜய்யின் பஞ்ச் வசனங்கள் மற்றும் நடன காட்சிகளை காட்டி செபாஸ்டியனுக்கு அவர்கள் சிகிச்சை அளிக்கத் தொடங்கினர். தற்போது சிறுவன் மெதுவாக நடப்பதாகவும், பேச முயற்சிப்பதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் படங்கள் மூலம் செபாஸ்டியன் குணமடைய துவங்கியது அவனது பெற்றோரையும், மருத்துவர்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தச் செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள், இதனை சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











