'சூர்யா, விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான்'..வாக்களிக்க முன்வராத முன்னணி நட்சத்திரங்கள்
சென்னை: நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்கள் வாக்கினை செலுத்த முன்வராதது, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் 100% வாக்குப்பதிவிற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகளிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது.
திரைப் பிரபலங்களுக்கு தனி வரிசை இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறினாலும், முன்னணி நட்சத்திரங்கள் பலரும் வரிசையில் நின்று வாக்களித்திட அதிகளவில் ஆர்வம் காட்டினர்.

சென்னை வாக்குப்பதிவு
நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 57% வாக்குகளே சென்னையில் பதிவாகின. படித்தவர்கள் அதிகம் இருக்கும் சென்னையில் இவ்வளவு குறைவாக வாக்குப்பதிவானது தேர்தல் ஆணையத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. தேர்தல் ஆணையம் இங்கே அதிகளவில் விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட்டும் கூட மக்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்த முன்வரவில்லை. அதேநேரம் படிக்காதவர்கள் அதிகம் இருக்கும் கிராமப்புறங்களில் அதிகளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

திரைப் பிரபலங்கள்
திரைப் பிரபலங்களுக்கு தனி வரிசை கிடையாது என்றாலும் நடிக, நடிகையர் பலரும் ஆர்வமாக தங்கள் வாக்கினை வரிசையில் காத்திருந்து பதிவு செய்தனர். அஜீத், ரஜினி, கமல், விஜய், சிவகார்த்திகேயன், விவேக், ஆர்யா, விஷால் என முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை செலுத்தினர். இதேபோல நடிகைகளில் ஷாலினி, குஷ்பூ, திரிஷா, வரலட்சுமி என முன்னணி நடிகைகள் தொடங்கி இளம் நடிகைகள் வரை அனைவரும் தங்கள் வாக்கினைப் பதிவு செய்தனர்.

வாக்களிக்காத பிரபலங்கள்
நேற்று நடைபெற்ற தேர்தலில் ஏ.ஆர்.ரஹ்மான், சூர்யா, விக்ரம், சமந்தா, இளையராஜா, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், இயக்குநர் மணிரத்னம், விக்ரம் பிரபு ஆகிய முன்னணி திரையுலக நட்சத்திரங்கள் தங்கள் வாக்கினை செலுத்த முன்வரவில்லை.

சூர்யா
தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு விளம்பரங்களில் நடித்த சூர்யா என்னால் வாக்கினை செலுத்த முடியவில்லை மன்னித்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதேபோல நடிகர் விக்ரம் பிரபு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் வெளிநாட்டில் இருந்ததால் வாக்களிக்கவில்லை.

தனுஷ்
நேற்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் தங்களது வாக்கினை செலுத்தவில்லை. பலமுறை வீடு மாறியதால் எங்கு ஓட்டு இருக்கிறது என்று தெரியவில்லை, அதனால் இருவரும் தங்கள் வாக்கினை செலுத்த முடியவில்லை என்று தனுஷ் தரப்பில் கூறப்படுகிறது.

சமந்தா
சென்னைப் பொண்ணு என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் சமந்தா இந்தத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்தவில்லை. இளையராஜா, மணிரத்னம், விக்ரம் வாக்களிக்காததற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.
முன்னணி நட்சத்திரங்களாக இருந்துகொண்டு இவர்களே இப்படி செய்யலாமா? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











