நடிகர் சங்கத் தேர்தல்: பாதுகாப்பு கோரிய விஷாலின் மனுவை அவசர வழக்காக விசாரிக்கிறது ஹைகோர்ட்!
சென்னை: நடிகர் சங்க தேர்தல் பாதுகாப்பு தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தல் நாளை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நடிகர் நாசரும், சுவாமி சங்கர்தாஸ் அணியின் சார்பில் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
இதற்கான வாக்கு சேகரிப்பில் இரு அணியின் நிர்வாகிகளும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால் உறுப்பினர்கள் சேர்க்கை, மற்றும் பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக நடிகர் சங்க தேர்தலை மாவட்ட பதிவாளர் ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி உத்தரவிட்டார்.

முறையீடு
நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்ட விவகாரம் இரு அணி நிர்வாகிகளிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்தது தொடர்பாக விஷால் அணியினர் கடந்த 20ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

நீதிபதி மறுப்பு
அப்போது சங்கங்களின் மாவட்ட பதிவாளரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதனை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி ஆதிகேசவலு மறுப்பு தெரிவித்தார்.

வாக்குகளை எண்ணக்கூடாது
இந்நிலையில் விஷால் தரப்பின் மனுவை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்த சங்கங்களின் பதிவாளர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் பதிவாகும் வாக்குகளை எண்ணாமல் தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் வாக்கு பெட்டிகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இன்று விசாரணை
இதைத்தொடர்ந்து நாளை நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக பாதுகாப்பு அளிக்கக்கோரி விஷால் தரப்பு தொடர்ந்த வழக்கை அவசர வழக்க விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். நடிகர் சங்கத் தேர்தல் நாளை நடக்கவுள்ள நிலையில் அவசர வழக்காக விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்.


Click it and Unblock the Notifications











