சென்னை மக்களின் துயர் துடைக்க தொடர்ந்து உதவும் தெலுங்கு நடிகர்கள்
ஹைதராபாத்: சென்னை மக்களின் துயரைத் துடைக்க தெலுங்கு நடிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
கன மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு தெலுங்கு நடிகர்கள் ஒன்றிணைந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். முதல் கட்டமாக தங்களால் இயன்ற தொகையை மக்களுக்கு அளிக்க முன்வந்தனர்.
அடுத்தபடியாக மற்றவர்களிடம் இணைந்து பொருட்களைத் திரட்டி டிரக்குகள் மூலம் சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து பிரபல இளம் தெலுங்கு நடிகர்கள் 10 பேர் நேற்று பிரபல மால்களுக்குச் சென்று உண்டியல் ஏந்தி மக்களிடம் பணம் வசூல் செய்தனர்.
மேலும் ராமாநாயுடு அறக்கட்டளை சார்பில் மக்கள் தங்களால் முடிந்த தொகையினை அனுப்பி வைக்கலாம் என்றும் அந்தத் தொகையை தாங்கள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சேர்ப்பதாகவும் அறிவித்தனர்.
தெலுங்கு நடிகர்களின் இந்த அறிவிப்பிற்கு ஆந்திர, தெலுங்கானா மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதைத்தவிர இன்று இரவு மேலும் 3 டிரக்குகளில் மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை நடிகர் ராணா டகுபதி அனுப்பி வைக்கவிருக்கிறார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் " இன்று இரவு சென்னைக்கு மேலும் 3 டிரக்குகளில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கிறோம்.
நடிகர் தனுஷ் உங்களது தன்னார்வலர்கள் குறித்த விவரங்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்" என்று சற்று முன்னர் ராணா டகுபதி தெரிவித்திருக்கிறார்.
மொத்தத்தில் தெலுங்கு நடிகர்கள் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











