மியான்மர் நிலநடுக்கம்... 3வது பாடலை வெளியிட முடியாமல் "எல்லை"யில் நிற்கும் படக்குழு
சென்னை: வித்தியாசமான முயற்சியாக சென்னை டூ சிங்கப்பூர் படத்தின் ஆறு பாடல்களையும், ஆறு நாடுகளில் வெளியிடும் சாலை வழி இசைப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான். ஆனால், நிலநடுக்கம் காரணமாக மூன்றாவது பாடலை வெளியிட முடியாமல் மியான்மர் எல்லையில் படக்குழு நிற்கிறதாம்.
அறிமுக இயக்குநர் அப்பாஸ் அக்பர் இயக்கி இருக்கும் இந்த 'சென்னை டூ சிங்கப்பூர்' திரைப்படத்தில் புதுமுகங்கள் கோகுல் ஆனந்த் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஜீன்ஸ் படத்தில் இயக்குநர் ஷங்கர் ஏழு உலக அதிசயங்களைக் காட்டி வியப்பூட்டியது மாதிரி, இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை வித்தியாசமாக நடத்திக் காட்ட படக்குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி, படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பாடல்களையும் சென்னையில் தொடங்கி சிங்கப்பூர் என ஆறு நாடுகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த சாலை வழி இசைப்பயணத்தை தொடங்கினார் ஜிப்ரான்.
முதல்பாடல் சென்னையில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா இந்த இந்த இசைப் பயணத்தைத் தொடங்கி வைத்தார். இரண்டாவது பாடல் பூடானில் வெளியிடப்பட்டது. மூன்றாவது பாடலை மியான்மரில் வெளியிட திட்டமிட்டு படக்குழு அங்கு பயணம் மேற்கொண்டது.
ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால், படக்குழுவால் எல்லையைத் தாண்டி மேற்கொண்டு பயணிக்க முடியவில்லை. இதனால் தற்போது மியான்மர் எல்லையில் சென்னை டூ சிங்கப்பூர் படக்குழு தங்கியுள்ளது.
மியான்மரைத் தொடர்ந்து தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் பயணம் செய்து இறுதியாக சிங்கப்பூரில் கடைசிப் பாடலை வெளியிட ஜிப்ரான் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











