ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை... தியேட்டரில் வெளியிடுகிறார் சேரன்!
தமிழ்நாட்டு தியேட்டர்காரர்களின் அராஜகம் தாங்காமல்தான் சி2ஹெச் என்ற திட்டத்தை அறிவித்தார் இயக்குநர் சேரன். புதுப் படங்களை தியேட்டர்களில் வெளியிடும் அதே நேரத்தில் டிவிடியாக வெளியிட்டு ரசிகர்களின் வீடுகளுக்கே போய்க் கொடுக்கும் திட்டம்.
இதை சேரன் நடைமுறைப்படுத்த முயன்றபோது தியேட்டர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு. ஒரு வழியாக தயாரிப்பாளர் சங்கத்தின் துணையுடன் சி2ஹெச் முறையில் முதல் படமாக தனது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கையை வெளியிட்டார் சேரன்.

படம் குறித்து பாஸிடிவான கருத்துக்கள் வந்தாலும், வணிக ரீதியாக சேரன் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அந்தப் படத்தின் டிவிடிகள் இன்னும் அதிகமாக விற்றிருந்தால், தொடர்ந்து பல படங்கள் அதே முறையில் வெளியாகி இருக்க வாய்ப்பிருந்தது.
ஆனால் அதெல்லாம் நடக்கவில்லை. இப்போது இந்தத் திட்டத்தில் பணம் செலுத்திய முகவர்கள் சிலர் சேரனுக்கு எதிராகத் திரும்ப, வழக்கு, கோர்ட் என அலைகிறார் சேரன்.
இன்னொரு பக்கம், தனது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை மீண்டும் தியேட்டர்களில் வெளியிடவும் முடிவு செய்துள்ளார்.
வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப் போவதாக இப்போது அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சேரன் கூறுகையில், "இப்படத்தை நிறையப் பேர் பார்க்கவில்லை. படத்தைப் பார்த்தவர்களும் திரையரங்குகளில் பார்க்க விரும்புகிறார்கள். எனவே, இப்படத்தை ஏப்ரல் 14ம் தேதி திரையில் வெளியிட முடிவு செய்துள்ளேன். இப்படத்தை கண்கள் முழுவதும் கனவுகளோடு திரியும் இளைஞர் கூட்டத்திற்கு காணிக்கை ஆக்குகிறேன்," என்றார்.
அது கிடக்கட்டும் சேரன்... ஏகப்பட்ட பிஸினஸ் கனவுகளோடு உங்கள் சி2ஹெச் திட்டத்தில் சேர்ந்தார்களே... அவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?


Click it and Unblock the Notifications











