மலரும் முன்னே கசங்கிப் போன பிஞ்சு மொட்டு.. சுஜித் மரணத்தால் கலங்கும் தமிழ் திரையுலகம்!
சென்னை: குழந்தை சுஜித்தால் மரணத்தால் தமிழ்த் திரைத்துறையும் கலங்கிப் போய் நிற்கிறது.
திருச்சி அருகே ஆழ்துளை கிணறுக்குள் விழுந்த குழந்தை சுஜித் 80 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான். குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த நாள் முதலே உயிருடன் மீட்டுவிட வேண்டும் என தமிழகம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
ஆனால் குழந்தையின் உடல் அழுகிய நிலையில் இன்று காலை மீட்கப்பட்டது. உடற்கூராய்வுக்கு பின் வீட்டிற்கு கொண்டு செல்லப்படாமல் ஃபாத்திமா புதூர் கல்லறையில் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

திரைத்துறை துயரம்
சுஜித்தின் மரணம் தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை சுஜித்தின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரைத்துறையை சேர்ந்தவர்கள் தங்களின் துயரத்தை பதிவு செய்து வருகின்றனர்.
கண்ணீர் நிரம்ப
நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ள டிவிட்டில், சுஜித் - வல்லரசு இந்திய மண் திண்ற பிஞ்சு உயிர்! மீட்க வந்த இயந்திரங்களோடு இயந்திரங்களாய் நாமும் திரும்பி விடுகிறோம் அடுத்த வேலைக்கு. மீண்டும் 100 அடி குழிக்குள் கண்ணீர் நிரம்பக் காத்திருப்போம்! என தெரிவித்திருக்கிறார்.
இதயமே நொறுங்குகிறது
நடிகர் கிருஷ்ணா பதிவிட்டுள்ள டிவிட்டில் இதயமே நொறுங்குகிறது.. சுஜித்தின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. என்று தெரிவித்திருக்கிறார்.
கற்றுக்கொள்வோம்
நடிகர் விக்ரம் பிரபு பதிவிட்டுள்ள டிவிட்டில், போர்வெல் மூடப்பட்டிருந்தால்.. ஒரு வேகமான பதில் இருந்தால்
சிறந்த தொழில்நுட்பம் இருந்தால்.. இப்படி பல இருந்தால்'கள் இருந்திருந்தால் இந்த சம்பவம் ஒரு அப்பாவி பச்சிளம் குழந்தையை எடுத்துக்கொண்டிருக்காது. இது தோல்வி என்று சொல்ல எந்த அமைப்பும் இல்லை. நடந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வோம் என்று நம்புகிறோம்.. என தெரிவித்திருக்கிறார்.
கவனமாய் இருங்கள்
நடிகர் ஷாந்தனு பதிவிட்டுள்ள டிவிட்டில் மீண்டும் மீண்டும் நடப்பதை பார்க்கும் போது இதயம் உடைகிறது. சீனாவில் 300 அடி ஆழ போர்வேல்லில் சிக்கிய குழந்தை மீட்கப்பட்டது. நம் நாடு பல விஷயங்களுக்கு அதிகளவு பணம் செலவழிப்பதைக் கண்டு மனம் வருந்துகிறது, ஆனால் இதுபோன்ற சம்பவங்களிலிருந்து உயிரைக் காப்பாற்ற தொழில்நுட்பத்தைப் பெற முடியவில்லை! பெற்றோர்களே மிகவும் கவனமாய் இருங்கள் என தெரிவித்துள்ளார்.
பிஞ்சு மொட்டு
நடிகை குஷ்பு பதிவிட்டுள்ள டிவிட்டில் ஒரு பூவின் பிஞ்சு மொட்டு அவனது எந்த தவறும் இல்லாமல் பூக்கும் முன்பே நசுக்கப்பட்டுவிட்டான்.. சுஜித்தை எங்களால் காப்பாற்ற முடியவில்லை என்று உலகை எழுப்பியிருக்கிறது. இதயம் நொறுங்குகிறது.. அவரின் பெற்றோக்கு வலிகள்.. சுஜித்தின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. சிறிய தேவதையே அமைதியாக ஓய்வெடுங்கள்.. என்று உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.
நாம் மாற வேண்டும்
நடிகர் ரோபோ ஷங்கர் பதிவிட்ட டிவிட்டில், இந்த செய்தியை கேட்டதும் என் இதயமே வெளியேறிவிட்டது. இப்படி இறப்பது இவரே கடைசியாக இருக்கட்டும்.. அரசாங்கத்தை குறை சொல்ல வேண்டிய தேவையில்லை.. முதலில் நாம் மாற வேண்டும் என பதிவிட்டிருக்கிறார்.
மீண்டும் அடக்கம்
நடிகை ரித்திவிகா பதிவிட்டுள்ள டிவிட்டில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டான் சுஜித், இந்த மண்ணில் மீண்டும் பிறந்து வராதே.. என தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











