தயாரிப்பாளர் சங்கத்தில் எஸ்.ஏ.சி., கேயார் அணிகள் செம ரகளை: அடிதடி

கடந்த 2011ம் ஆண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு எஸ்.ஏ. சந்திரசேகரன் தலைமையிலான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர். அவர்கள் சங்க பணிகளை சரியாக செய்யவில்லை என்று கேயார் தரப்பு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக பொதுக்குழுவை கூட்டுமாறு கேயார் தரப்பு வலியுறுத்தியது. அதற்கி எஸ்.ஏ.சி. தரப்பு மறுக்கவே கேயார் அணி நீதிமன்றம் சென்றது.
அதன் பிறகு நீதிமன்ற உத்தரவின்படி கூட்டப்பட்ட பொதுக்குழுவில் எஸ்.ஏ.சி. தலைமையிலான நிர்வாகிகள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து எஸ்.ஏ.சி. தரப்பு நீதிமன்றம் சென்றதால் வாக்குகள் எண்ணப்படுவது தள்ளி வைக்கப்பட்டது. அதன் பிறகு உயர் நீதிமன்ற உத்தரவின்படி வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் எஸ்.ஏ.சி. குழுவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக அதிக வாக்குகள் இருந்தன. இகையடுத்து தீர்மானம் வெற்றி பெற்றது.
அதன் பிறகும் எஸ்.ஏ.சி. அணியினர் பதவி விலகவில்லை. இந்நிலையில் எஸ்.ஏ.சி. தலைமையிலான அணி நிர்வாகம் செய்யும் அதிகாரத்தை இழந்துவிட்டது என்றும், அதனால் சங்கம் தொடர்பான வங்கி கணக்குகளை ஒப்படைக்குமாறும் சென்னை மாவட்ட பதிவாளர் கடிதம் எழுதினார். இந்த சூழலில் சங்க வளாகத்தில் கேயார் அணியினர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
அதன் பிறகு கேயார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எஸ்.ஏ.சி. தலைமையிலான நிர்வாகிகள் அணி செயல்பட தடைவிதித்து வங்கிக் கணக்கை கேட்டுள்ளது பதிவுத்துறை. இதற்கு மேலும் அவர் பதவியில் உள்ளார். அவர் உடனே சங்க ஆணவங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை ஒப்படைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். அவரது அணியை எதிர்த்து போட்டியிட்டு நாங்கள் வெல்வோம். தயாரிப்பாளர்களின் நலனை காப்போம் என்றார்.
அப்போது பாபுகணேஷ் தலைமையிலான சிலர் அங்கு வந்து இந்த இடத்தில் பேட்டி கொடுக்கக் கூடாது என்று சத்தம்போட கேயார் அணி ஆத்திரம் அடைந்தது. திடீர் என்று இரு தரப்பும் மோதிக் கொண்டது. அப்போது ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர். சிறிது நேர சண்டைக்குப் பிறகு எஸ்.ஏ.சி. அணியினர் காரில் கிளம்விட்டனர்.
அதன் பிறகு மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய கேயார் கூறுகையில்,
நாங்கள் எங்கள் தரப்பு நியாங்களை எடுத்துச் சொல்வது போன்று எஸ்.ஏ.சி. மற்றும் தாணுவும் தங்கள் தரப்பு நியாயங்களை சொல்ல உரிமை உண்டு. அதை விட்டுவிட்டு அடியாட்களை வைத்து எங்களை தாக்க நினைக்கின்றனர். அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுப்போம் என்றார்.
அதற்கு எஸ்.ஏ.சி. தரப்பு கூறுகையில்,
பதிவாளர் கடிதம் ஒன்றும் இறுதியானது அல்ல. நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகையில் எதற்கெடுத்தாலும் பிரச்சனை செய்து சங்கத்தை முடக்க நினைக்கின்றனர். வரும் 24ம் தேதி பொதுக்குழு கூடும் என்று உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும். அதற்குள் இவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். தட்டிக்கேட்ட எங்களை தாக்குகின்றனர் என்றனர்.


Click it and Unblock the Notifications











