வைரமுத்துவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, 'நீதிபதிகள் வாழ்நாள் முழுவதும் நேர்மையாக இருந்து விட்டு, ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு விலைபோய் விடுகின்றனர்' என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, திரைப்பட நிதிநிறுவன உரிமையாளர் முகுந்சந்த் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுதாகர், பி.என்.பிரகாஷ் ஆகியோர் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், "நீதித்துறை மீது மதிப்பு வைத்துள்ளதாகவும், தனது வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறியுள்ளது அவர் நீதித்துறை மீது வைத்துள்ள மரியாதையைக் காட்டுகிறது.
மேலும், நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்யாத நிலையில், மனுதாரர் அரசு தலைமை வக்கீலிடம் அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் பெறவில்லை.
எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல," என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.


Click it and Unblock the Notifications











