கொரோனா பயம்... பொங்கல் பட ரிலீஸ் வெறிச்சோடிய தியேட்டர்கள்
கொரோனா பயம் காரணமாக தியேட்டர்களில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடியது. பல பெரிய பட்ஜெட் படங்களே ஒதுங்கிய நிலையில் போட்டிக்கு வந்த படங்கள் வெளியான தியேட்டர்கள் வெறிச்சோடியது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அஜித்தின் வலிமை, ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பல படங்கள் வெளியாவதாக இருந்தது. ஆனால் திடீரென 3 வது அலை பரவியதால் அவைகள் போட்டியிலிருந்து வெளியேற சிறிய பட்ஜெட் படங்கள் மட்டும் களத்தில் குதித்தன. நேற்று சில படங்களும் இன்று சில படங்களும் வெளியான நேரத்தில் கொரோனா பயத்தில் தியேட்டர்களுக்கு மக்கள் வரத்து குறைவாக இருந்ததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

திடீரென வந்த 3 வது அலை
கொரோனா முதல் அலை ஓய்ந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது, மார்ச் மாதத்தில் 2 வது அலை பரவி பல உயிர்களை பலி வாங்கியது, லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா 3 ஆம் அலை கடந்த ஆண்டு செப்டம்பர் அக்டோபரில் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமாக ஜனவரியில் பரவ தொடங்கியுள்ளது.

சென்னையில் கடும் பாதிப்பு, கட்டுப்பாடு
தமிழகத்தில் தினமும் பாதிப்பு 20 ஆயிரம் என்கிற அளவில் உள்ளது, அதிலும் சென்னையில் 8000-க்கு மேல் உள்ளது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டன. தியேட்டர்களில் மீண்டும் 50% அளவே பொதுமக்கள் அனுமதி என அரசு அறிவித்தது. கொரோனா பரவலின் வேகம் அதிகமாக இருப்பதால் பல பெரிய பட்ஜெட் படங்கள் பொங்கல் வெளியீட்டை ரத்து செய்தன.

ஒதுங்கிய பெரிய பட்ஜெட் படங்கள்
நடிகர் அஜித்தின் வலிமை, ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் போன்ற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் போட்டியிலிருந்து விலகிவிட்டன. சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே போட்டியில் குதித்தன. இதில் முக்கியமான படங்களாக சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கண்டா, பிரபுதேவாவின் தேள், புதுமுக நடிகர் அஷ்வினின் என்ன சொல்ல போகிறாய், விதார்தின் கார்பன் போன்ற படங்கள் பொங்கலுக்கு வெளியாகிறது.

கொரோனா பயம் தியேட்டரை புறக்கணித்த மக்கள்
தாங்கள் எதிர்பார்த்த தங்களின் அபிமான நடிகர்களின் படங்கள் வெளியாகாததால் ரசிகர்கள் தியேட்டர் பக்கம் ஆளைக்காணோம், அதையும் மீறி வெளியிடப்பட்ட தியேட்டர்களில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. கொரோனா பயம் காரணமாக பொதுமக்கள் வரத்து குறைவாக உள்ளது. ஏற்கெனவே 50 % பார்வையாளர்கள் என அரசின் கட்டுப்பாடு ஒருபுறம், தியேட்டர்களில் ஒன்றாக அமர்வதால் கொரோனா பரவுமோ என்கிற மக்களின் மனநிலை, வீட்டிலிருந்தே டிவி நிகழ்ச்சிகளை பார்த்துக்கொள்ளலாம் என்கிற எண்ணம் காரணமாக தியேட்டர்கள் ஈயடிக்கின்றன.

தவறாக கணித்த சிறிய பட தயாரிப்பாளர்கள்
பெரிய படங்கள் போட்டியில் இல்லை இந்த நேரம்தான் சரியான நேரம் தியேட்டர்களும் எளிதில் கிடைக்கின்றன, படத்தை ரிலீஸ் செய்யலாம் எனக்கணக்கிட்டு வெளியிடப்பட்ட படங்களுக்கு தியேட்டரில் பார்வையாளர்கள் இல்லாமல் பலத்த நஷ்டத்தை சந்திக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை கிராமங்களில் பெரிய அளவில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை, நகர்புறங்களில் தியேட்டர், சுற்றுலா தளங்கள் என பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் கொரோனா பயம் காரணமாக சென்னை போன்ற நகரங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

ஓடிடி தளமே தேவலை, தியேட்டர் ஈயடிக்கிறதே
இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் படங்கள் கொரோனா மூன்றாவது அலை காரணமாக கடும் பாதிப்பை அடைந்திருப்பது மட்டும் நிச்சயம். வழக்கமாக சசிகுமார் படங்களுக்கு வரும் கூட்டமும், புதுமுக நடிகர் அஷ்வினுக்கு வரும் இளம் ரசிகர்கள் பட்டாளத்தையும் சில தியேட்டர்களில் பார்க்க முடிந்தது. ஆனால் பல படங்களில் கூட்டமே இல்லை என்பதே எதார்த்தம். இதற்கு ஓடிடி தளத்தில் படத்தை ரிலீஸ் செய்திருந்தால்கூட ஓரளவு ஈடுகட்டியிருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications











