வெற்றிமாறனின் வட சென்னைக்காக 'கொடி'யை துரிதப்படுத்தும் தனுஷ்!
சென்னை: துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கொடி படத்தின் படப்பிடிப்பானது வருகின்ற பிப்ரவரி 21ம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது.
எதிர்நீச்சல், காக்கிச்சட்டை படங்களைத் தொடர்ந்து தற்போது தனுஷை வைத்து 'கொடி' படத்தை இயக்கி வருகிறார் துரை.செந்தில்குமார்.
முதன்முறையாக தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பொள்ளாச்சி பகுதிகளில் நடந்து வருகிறது.

இதில் தனுஷிற்கு ஜோடியாக த்ரிஷா, ஷாம்லி இருவரும் நடித்து வருகின்றனர்.இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 21ம் தேதியுடன் மொத்த படப்பிடிப்பையும் முடிவுக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
தனுஷ்- வெற்றிமாறனின் வடசென்னை படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குவதால் அதற்குள் இந்தப் படத்தை முடித்து விட தனுஷ் ஆர்வம் காட்டுகிறாராம்.
பிப்ரவரி 21 ம் தேதி மொத்தப் படமும் நிறைவடைந்து விட்டால் மீதமிருக்கும் நாட்களை படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் தனுஷின் திட்டங்களில் ஒன்றாக உள்ளது.
ஜனவரி 5ல் தொடங்கிய கொடி படமானது தற்போது பாதிக்கு மேல் வளர்ந்திருக்கிறது. தனுஷ் அரசியல்வாதியாக நடிக்கும் இப்படம் அரசியலின் மற்றொரு இருண்ட பக்கங்களை எடுத்து கூறும் என்று கூறுகின்றனர்.
தனுஷுடன் முதன்முறை ஜோடி போடும் த்ரிஷா இந்தப் படத்தில் வில்லியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











