Ameer speech: சாதி படம் எடுத்த என்னடா பிரச்சனை.. கேவலப்படுத்தாதீங்க.. மேடையில் கிழித்த அமீர்!
சென்னை: மாரி செல்வராஜ் மற்றும் துருவ் கூட்டணியில் கடந்த 17ஆம் தேதி 'பைசன்' படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய இயக்குநர் அமீர், பத்திரிக்கையாளர்கள் மாரி செல்வராஜை நெருக்கடிக்கு உள்ளாக்கி திரும்பத் திரும்ப இதுபோன்று ஏன் படங்களை எடுக்கிறீர்கள், சமுதாயத்திற்குள் ஒரு பிரச்சனையை உண்டாக்க வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள் என தொடர்ந்து இதுபோன்ற கேள்விகளை கேட்கிறார்கள். இது எவ்வளவு அபத்தமான கேள்வி. கண்ணுக்குத் தெரியாத சாமி, இல்லாத பேய் இவை இரண்டை பற்றியும் நிறைய திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுகின்றன. சாமியை யாரும் பார்த்ததே கிடையாது அதைப்பற்றி படங்கள் எடுத்தால் கொண்டாடுகிறார்கள். அதேபோல பேய் இல்லவே இல்லை. பேய் உண்மையிலேயே பயந்தது, மனிதர்கள் அதிகமாக நடமாடும் பகல் நேரத்தில் வரவே வராது இரவு நேரத்தில் தான் வரும். அதனால் தான் பேய் பயந்தது என சொல்கிறேன். அதைப்பற்றி படத்தை எடுத்தால் அந்த படமும் வெற்றி அடைகிறது.

பைசன் வெற்றி விழா: ஆனால் கண்ணுக்கு தெரியக்கூடிய சாதி, அது ஏற்படுத்துகிற தீமைகள், அதனால் ஏற்பட்ட வலிகள் கொடுமைகளை, ஒருவர் படம் எடுக்கக்கூடாது என்ற கேள்வியை முன் வைக்கும் போது அது அபத்தமாக தெரிகிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு படத்தை எடுத்து, ஒரு கருத்தை சொல்கிறார். அதற்கு மாற்று கருத்து இருந்தால், அதை சொல்வதற்கு அனைத்து உரிமையும் உண்டு. ஆனால், படம் எடுக்கக்கூடாது, ஏன் இப்படிப்பட்ட படங்களை எடுக்கிறீர்கள் என்ற கேள்வி மிகவும் ஆபத்தானதாக நான் நினைக்கிறேன். மாரி செல்வராஜ், பா ரஞ்சித் படங்களை பொதுவெளியில் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள், எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால், அதில் ஒரு நியாயம் இருப்பதாக நான் பார்க்கிறேன்.
கேவலப்படுத்தாதீங்க: ஏனென்றால், இத்தனை நாட்களாக அவர்களை அடித்து விட்டோம் என்ற எண்ணமாக கூட இருக்கலாம், நடந்தது நடந்து விட்டது இப்போது எதற்கு அதை வெளியில் பேசுகிறீர்கள் என்ற எண்ணமாக கூட இருக்கலாம். ஆனால், சினிமாவை சார்ந்தவர்கள் படத்தை படுமோசமாக விமர்சிக்கிறார்கள் அதுதான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு இயக்குனர் பைசன் படம் குறித்து மோசமான வகையில் விமர்சித்திருக்கிறார். "பைசன் பைசன் அது ஒரு பாய்சன் பாய்சன்" என பாடல் பாடி இருக்கிறார், உங்களிடம் உண்மையிலேயே கருத்து இருந்திருந்தால் அந்த கருத்தை சொல்ல வேண்டுமே தவிர, மாரி செல்வராஜ் இப்படி படம் எடுக்க கூடாது என்று சொல்லக்கூடாது. மாரி செல்வராஜ் சினிமாவின் மூலமாக ஒரு அரசியலை சொல்கிறார் என்றால், நீங்களும் சினிமாவில் மூலமாகவே அதற்கு பதிலை சொல்லுங்கள். அதற்கு உன்னிடம் திராணி இல்லை, தகுதி இல்லை என்றால் அவதூறு சொல்லக்கூடாது, கேவலப்படுத்த கூடாது என இயக்குநர் அமீர் பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











