வில்லனா?..ஹீரோவா?..யார் இந்த பிரதாப் போத்தன்..காலத்தால் அழியாத நாயகனின் வாழ்க்கை பயணம்!
சென்னை : யார் இந்த பிரதாப் போத்தன்...வில்லனா? நாயகனா என குழம்பும் அளவுக்கு, அசாத்திய நடிப்புக்கு சொந்தக்காரர். நாடகம், நடிப்பு, சினிமா, இயக்கம், தயாரிப்பு என சினிமாவை காதலித்த நாயகன் இன்று மரணத்தை தழுவினார். அவரின் வாழ்க்கை பயணத்தை பார்க்கலாம்.
Recommended Video
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ந் தேதி பிறந்தார் பிரதாப் போத்தன். சிறுவயதிலேயே தமிழ்நாட்டில் செட்டிலான பிரதாப் போத்தன் ஊட்டியில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.
கல்லூரி படிப்புக்காக சென்னை வந்த பிரதாப் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பி.ஏ எக்கனாமிக்ஸ் படித்தார். நடிப்பின் மீது ஆர்வமும் தேடலும் இருந்ததால் கல்லூரியில் படிக்கும் போதே நண்பர்களுடன் இணைந்து மேடை நாடகங்களில் நடித்துள்ளார். ஒரு சில ஆங்கில நாடகங்களிலும் நடித்து நடிப்பின் மீது இருந்த காதலை தீர்த்துக்கொண்டார்.

சினிமா மீது காதல்
பிரதாப் போத்தனுக்கு சினிமா மீது ஈர்ப்பு வர காரணமாக இருந்தது அவரது அண்ணன் தயாரிப்பாளர் ஹரி தான். இவரின் உதவியால் பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவான "அழியாத கோலங்கள்" திரைப்படத்தின் மூலம் தமிழ் நடிகராக அறிமுகமானார். 1979ம் ஆண்டு கமலும் ரஜினியும் மளமளவென வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அந்த கால கட்டத்தில் பிரதாப் போத்தன் எதார்த்தமாக நடித்து முதல் படத்திலேயே வெற்றி வாகை சூடினார். இந்த திரைப்படம் சென்னையில் 600 நாட்களைக் கடந்து ஓடியது. பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவையும் இயக்கத்தையும் ரசிகர்கள் பாராட்டித் தீர்த்தார்கள்.

மக்கள் மனதில் தனிஇடம்
மீண்டும் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் மூடுபனி படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரதாப் போத்தன். எப்போதாவது அழ வேண்டும் என்று நினைத்தால் யூடியூபில் முதலில் தட்டுவது மூடுபனி திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிதான். இந்த படத்தில் கடைசியில் மண்டியிட்டு அம்மா..அம்மா என குழந்தை போல கதறி அழும் பிரதாப் போத்தனின் நடிப்பும், இசைஞானியின் இசையும் சப்த நாடியையும் அடக்கிவிடும். என்ன நடிப்பு என பலரை பெருமிதத்துடன் உச்சிகொட்டவைத்து மக்கள் மனதில் தனக்கென தனி இடத்தைபிடித்தார்.

பன்முகத்தன்மை
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டு பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றிவிழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன், மலையாளத்தில் ருத்ரபீடம், டைசி,ஒரு யாத்தரமொழி உள்ளிட்ட 12 படங்களை இயக்கி உள்ளார். இதில் மீண்டும் ஒரு காதல் படத்திற்காக தேசிய விருதையும் வென்றார்.

இரண்டு விவாகரத்து
சினிமாவில் பல்வேறு வெற்றிகளைக் குவித்த பிரதாப் போத்தனுக்கு, சொந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை. நடிகை ராதிகாவும், பிரதாப் போத்தனும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஆனால், திருமணமான, ஒரே ஆண்டில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதையடுத்து, 1990-ம் ஆண்டு அமலா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கேயா போத்தன் என்கிற மகளும் உண்டு. 2012-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.

கடைசியாக மலையாள படத்தில்
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த பிரதாப் பேத்தன் 1997ம் ஆண்டுக்கு பிறகு எந்த படங்களில் நடிக்காமல் இருந்தார். பிறகு 2005ம் ஆண்டு ஜீவா நடித்த ராம் படத்தில் நடித்தார். இதையடுத்து, தனுஷூடன் படிக்காதவன், சர்வம், ஆயிரத்தில் ஒருவன், பொன்மகள் வந்தாள், கமலி பிரம் நடுக்காவேரி படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழில் கடைசியாக துக்ளக் தர்பார் படத்தில் நடித்திருந்தார். மோகன்லால் இயக்கி வரும் ப்ரோஸ் படத்தில் நடித்துள்ளார்.

காலமானார்
இந்நிலையில், பிரதாப் போத்தன், இன்று காலை 8 மணி அளவில் உயிரிழந்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியாக வசித்து வந்த பிரதாப் போத்தன் சுயநினைவின்றி மெத்தையில் படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். ஆனால், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இவரது உடல் அஞ்சலிக்காக இன்று அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

நாளை இறுதிச்சடங்கு
பிரதாப் போத்தனின் உறவினர்கள் பலர் கேரளாவில் இருப்பதால் அவர்கள் வந்த பிறகு இறுதிச்சடங்கு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், நாளை காலை இறுதிச்சடங்கு நடக்கும் என்றும் கூறப்படுகிறது. பிரதாப்பின் இரண்டாவது மனைவி அமலாவும் தனது மகள் கேயா பேத்தனும் தகவல் அறிந்து பிரதாப் போத்தனின் இல்லத்திற்கு வந்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











