'தலைநகரம்' நாய் சேகரும், மருதமலை' ஏட்டு ஏகாம்பரமும் உருவானது இப்படித்தான்.. இயக்குனர் சுராஜ்
சென்னை: வடிவேலுவின் மறக்க முடியாத காமெடி கேரக்டர்களான நாய்சேகரும் ஏட்டு ஏகாம்பரமும் உருவானது எப்படி என்று இயக்குனர் சுராஜ் சொன்னார்.
கவலைகளில் உறைந்து கிடக்கும் மனங்களுக்கு வடிவேலுவின் காமெடிதான், கடந்த சில வருடங்களாகக் கசக்காத மருந்து.
சிரித்து விழவும் விழுந்து சிரிக்கவும் வடிவேலு என்கிற மகா கலைஞன், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம்!

ராவான ரவுடிங்க
அவரது பாடி லாங்குவேஜும் நடிப்பெனத் தெரியா நடிப்பும் சினிமா ஜாம்பவான்களையே மிரள வைத்திருக்கிறது. மண்ட பத்ரம், நாங்கள்லாம் ராவான ரவுடிங்க, இந்த கோட்டை நானும் தாண்டமாட்டேன்.. நீயும் தாண்டக் கூடாது, பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் என்பது உள்பட அவர் காமெடி பன்ச்கள் ஒவ்வொன்றும் இன்று வரை மறக்க முடியாதவை.

இயக்குனர் சுராஜ்
அவருடன் நடித்தவர்களே அவரை, நடிப்பு யுனிவர்சிட்டி என்கிறார்கள். அந்த யுனிவர்சிட்டிக்கு இன்று பர்த் டே. சும்மா விடுவார்களா ரசிகர்கள். சமூக வலைதளங்களில் கொண்டாடித் தீர்க்கிறார்கள், குதூகல ஃபேன்ஸ். இந்நிலையில், வடிவேலுவின் புகழ்பெற்ற காமெடி கேரக்டர்களான தலைநகரம் படத்தின் நாய் சேகர், மருதமலை படத்தின் ஏட்டு ஏகாம்பரம் உருவானது எப்படி என்று இந்தப் படங்களில் இயக்குனர் சுராஜிடம் கேட்டோம்.

காமெடி ரவுடி
''வின்னர், கிரி படத்துல இருந்தே வடிவேலுவோட எனக்கு நல்ல பழக்கம். வின்னர் படப் படப்பிடிப்பு இடைவேளையில ரணகளமா இருக்கும். பங்காளி, கூட இருந்தா காமெடியாதான் போகும் நேரம். எனக்கும் நல்ல காமெடி சென்ஸ் உண்டுங்கறதால ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகும். 'தலைநகரம்' படம் பண்ணும்போது, ஒரு காமெடி ரவுடியை உருவாக்கலாம்னு பேசினோம்.

மூக்குத்தி, கோட் சூட்
வழக்கமா ரவுடின்னா எப்படி இருப்பாங்களோ, அதை அப்படியே மாத்தி உல்டாவா பண்ணலாம்னு நினைச்சோம். அப்ப அந்த கேரக்டருக்கு ஒரு பேரு வைக்கணும்னு நிறைய யோசிச்சோம். செம்பட்டை சேகர்னு வைக்கலாம்னு நினைச்சோம். பிறகு பேசி பேசி உருவானதுதான் நாய் சேகர். பிறகு மூக்குத்தி, கோட் சூட் போட்டு, ஷூட் பண்ணினோம்.

கெட்டப் மிரட்டலா இருக்கு
அப்பவே வடிவேலு சொன்னார், எனக்கே என் கெட்டப் மிரட்டலா இருக்கு. கண்டிப்பா இது பெரிய ஹிட்டாகும்னு. சொன்னபடியே நடந்தது. அப்ப அவர் ரொம்ப பீக்ல இருந்தார். இந்தப் படத்துக்கு மொத்தமே, அஞ்சு, ஆறுநாள்தான் கால்ஷீட் கொடுத்திருந்தார். அவர் சீன் எல்லாத்தையும் ஒரே டேக்ல எடுத்தோம். இந்தப் படத்தை பெருசா காப்பாத்தினது வடிவேலு காமெடிதான்.

ஏட்டு ஏகாம்பரம்
அடுத்து மருதமலை பண்ணும்போது, அதுல வடிவேலுவை ரவுடியா காண்பிச்சாச்சு, இப்ப போலீசா காண்பிப்போம்னு ஏட்டு ஏகாம்பரம் கேரக்டரை உருவாக்கினோம். அதுவரை போலீஸ் அதிகாரியா நடிச்ச அர்ஜுனை போலீசாக்கி கதை பண்ணினோம். இந்தப் படத்தோட பல காமெடி, ஸ்பாட்ல உருவாக்குனதுதான். ஸ்கிரிப்ட்ல காமெடி சீன் இருக்கும். ஆனா, அதை டெவலப் பண்ணினது ஸ்பாட்லதான்.

அர்ஜுன் வடிவேல்
மருதமலை படத்துல, ஒரு அக்யூஸ்ட்டை அர்ஜுனும், வடிவேலுவும் கோர்ட்டுக்கு கொண்டு போற சீன் வரும். அதை டி.ஆர். கார்டன்ல ஷூட் பண்ணினோம். அங்க இருந்த செட்ல கதவை திறந்தா, அந்தப் பக்கம் வெறும் சுவர் மட்டும் தெரிஞ்சது. வீடுன்னு கதவைத் திறந்தா சுவர் மட்டும் இருக்கேன்னு நினைச்சேன். உடனே, அந்த காட்சியில, வீட்டுக்குள்ள அக்யூஸ்ட் போற மாதிரியும் பிறகு வடிவேலு கதவைத் திறந்து பார்த்து ஷாக் ஆகற மாதிரியும் எடுத்தோம்.

கதவைத் திறந்தா ஏரி
பிறகு காரைக்குடியில ஒரு ஏரியை ஷூட் பண்ணி, கதவைத் திறந்தா ஏரி இருக்கிற மாதிரி அதையும் இதையும் மேட்ச் பண்ணினோம். இந்தப் படத்தோட ஹிட்டுக்கும் வடிவேலு காமெடி கை கொடுத்தது. திரைக்கதையில காமெடி நல்லா உட்கார்ந்திடுச்சுன்னா படம் கண்டிப்பா
ஹிட்டாகும். கதைக்கு எவ்வளவு மெனக்கெடறோமோ, அதே அளவு காமெடிக்கும் மெனக்கெடணும்'' என்கிறார் இயக்குனர் சுராஜ்.


Click it and Unblock the Notifications











