உண்மை பேராபத்தானது..காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநரின் நச் பதில்!
சென்னை : தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து கோவா திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட்-ன் கடுமையான விமர்சனத்திற்கு படத்தின் இயக்குநர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
கோவாவில் கடந்த 20ந் தேதி தொடங்கிய சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் முடிவடைந்தது. இவ்விழாவில், இந்த ஆண்டிற்கான இந்திய திரைப்பட ஆளுமை விருது நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது.
இவ்விழாவில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், நடிகை குஷ்பு,ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

காஷ்மீர் ஃபைல்ஸ்
9 நாட்களாக கோலாகலமாக நடைபெற்று வந்த கோவா திரைப்பட நிறைவு விழாவில் பேசிய தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து மோசமான கருத்தை தெரிவித்தார். வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரசார படம் தி காஷ்மீர் ஃபைல்ஸ். இந்த படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படது எனக்கு அதிர்ச்சியும் குழப்பத்தையும் கொடுத்துள்ளது.

மோசமான படம்
இந்த படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். மதிப்புமிக்க திரைப்பட விழாவில் கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு மோசமான படமாக இது எங்களுக்குத் தோன்றுகிறது . விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என பேசியிருந்தார்.

நீங்கள் வெட்கப்பட வேண்டும்
இஸ்ரேலை சேர்ந்த நாடவ் லேபிட் தெரிவித்த கருத்துக்கு இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவ்ர் கிலொன் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலோன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தி காஷ்மீர் பைல்ஸ் குறித்து விமர்சனம் செய்த நாடவ் லேபிட்டிற்கு ஒரு திறந்த மடல் இது. நாடவ் லைபிட் நீங்கள் வெட்கப்பட வேண்டும் என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

உண்மை பேராபத்தானது
அதே போல தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில், "காலை வணக்கம். உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் பேசவைத்துவிடும். #CreativeConsciousness " என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











