நடிகர்களை பற்றி தவறாக பேசவேண்டாம்... கே.ராஜனுக்கு அட்வைஸ் செய்தாரா ஆர்.வி.உதயகுமார்!
சென்னை : சிட்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஆர். உதயகுமார், தெலுங்கு நடிகர்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என்று கே.ராஜன் சொன்னதுக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார்.
அக்ஷன்,த்ரில்லிங், க்ரைம் திரைப்படமான சிட்தி படத்தை பயஸ் ராஜ் எழுதி இயக்கி உள்ளார். இப்படத்தில் அஜி ஜான் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா உதயகுமார் மற்றும் ஹரிதா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள்.
சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவன் சிட்தி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கொலையாளியாக மாறுகிறார். அவர் ஏன் கொலையாளியாக மாறினார் ? இறுதியில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை. இப்படத்தின் அனைத்துப்பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

சிட்தி இசைவெளியீட்டுவிழா
இந்நிலையில் சிட்தி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், ஹீரோக்களை ராஜன் அதிகமாக திட்டுகிறார், அது தவறு. தமிழ் சினிமாவில் விஜயகாந்த் போல சாப்பாடு போட்டவர் யாரும் இல்லை. என்னை கூட்டி போய் சாப்பாடு போட்டவர் விஜயகாந்த் தான். யாரும் பசியுடன் இருப்பது பிடிக்காமல் சாப்பாட்டு போட்டவர் விஜயகாந்த்.

கேட்காமல் உதவியவர் அஜித்
கொரோனா காலத்தில் இயக்குனர் சங்கத்துக்கு ரஜினிகாந்த் போன் செய்து, எவ்வளவு பேர் கஷ்டத்தில் இருக்கீறீர்கள் என கேட்டு உதவியவர். கேட்காமலே உதவியவர் அஜித் குமார். தோல்வி படத்திற்கு பிறகு அதே நிறுவனத்திற்கு படம் செய்து கொடுப்பவர். வாழ்ந்து பார்த்தால் தான் இயக்குனராக முடியும். ஆனால், சில டூபாக்கூர் இயக்குனர்களும் இங்கே இருக்கிறார்கள் என்றார்.

ஒப்பற்ற கலைஞன் சிவாஜி
சிவாஜி சார், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் பிரபு என்னை அழைத்து சிவாஜி சாரிடம் கதை சொல்ல சொன்னார். நான் முதல் நாள் பார்த்த ஆங்கில படத்தின் கதையை கூறினேன். அதை கேட்ட அவர், இப்போதெல்லாம் பலர் சப்டில் ஆக்டிங், நேச்சுரல் ஆக்டிங் என சொல்கிறார்கள், நான் அதிகமாக நடித்துவிட்டேன், நான் மாற்றி நடிக்க வேண்டும் என்றார் சாகும் தருவாயிலும் நடிப்பில் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்த ஒப்பற்ற கலைஞன் அவர்.

பான் இந்தியா
சிலரின் தர்மம் வெளியில் தெரிவதில்லை, நமக்கு லாரன்ஸ், விஜய், சூர்யா என பலரும் உதவினார்கள் அவர்களை நாம் வாழ்த்த வேண்டும். இப்பொழுது சினிமா பிசினஸ் ஆக்கி விட்டீர்கள். சினிமா மீது ஆர்வம் கொண்டவர்களை இயக்குனராக்காமல், பணம் கேட்பவருக்கு கொடுத்து கெடுக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். முன்பேல்லாம் அனைத்து மொழிப்படங்களும் சென்னையில் தான் எடுக்கப்பட்டன. இப்பொழுது பான் இந்தியா என்ற வார்த்தை புதிதாக உருவாகி உள்ளது. அதை மாற்றியவர்கள், வியாபாரிகள் என்றார்.

படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
இசையமைப்பாளர் பற்றி தயாரிப்பாளரும், இயக்குநரும் தான் கூற வேண்டும். இசையமைப்பாளர் பாடல்களை சிறப்பாக உருவாக்கியுள்ளார் வாழ்த்துக்கள். சமீபத்தில் நான் பார்த்த டிரெய்லர்களில் என்னை விஷுவலாக அசத்தியது இந்தப்படம் தான். படத்தில் எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார் ஆர்வி உதயக்குமார்.


Click it and Unblock the Notifications











