விஜயகாந்த் படத்தில் நடிப்பதற்காக இப்படி ஒரு காரியத்தை செய்த சரத்குமார்...
சென்னை: சமீபத்தில் வெளிவந்த இயக்குநர் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டறையராக நடித்திருந்தார் சரத்குமார்.
தற்சமயம் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை தவிர்த்து மூன்று தமிழ்ப் படங்களிலும் ஒரு கன்னடப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் புலன் விசாரணை திரைப்படத்தில் தான் எப்படி ஒப்பந்தமானேன் என்பது பற்றி ஒரு பேட்டியில் சுவாரசியமாக கூறியிருக்கிறார் சரத்குமார்.

கண்ணதாசன் மகன்
சினிமாவிற்கு வருவதற்கு முன்னால் டிராவல் ஏஜென்சி நடத்திக் கொண்டிருந்த சரத்குமாருக்கு கலைவாணன் கண்ணதாசன் அவர்களின் நட்பு கிடைத்திருக்கிறது. மறைந்த கவிஞர் கண்ணதாசன் அவர்களுடைய மகன்தான் கலைவாணன். தமிழில் சில படங்கள் இயக்கி பாடல்கள் எழுதியுள்ள கலைவாணன், கடந்த 1994-ஆம் வருடம் மறைந்துவிட்டார். இவரது மகன் ஆதவ் கண்ணதாசன் தற்சமயம் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

கண் சிமிட்டும் நேரம்
கண் சிமிட்டும் நேரம் என்கிற கதையை சரக்குமாரிடம் கலைவாணன் கண்ணதாசன் சொல்ல அந்தப் படத்தை தயாரித்து அதில் சிறிய கதாபாத்திரத்திலும் நடிக்க சம்மதித்தார். தனது மகள் வரலட்சுமியின் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதனை தயாரித்தார். கார்த்திக் மற்றும் அம்பிகா அதில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். இந்தப் படத்திற்கு முன்னதாகவே சின்ன பூவே மெல்ல பேசு படத்தில் பிரபு நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் இவர்தான் நடிப்பதாக இருந்தது.

புலன் விசாரணை
கண் சிமிட்டும் நேரம் படத்திற்கு பின்னர் நடிப்பதில் ஆர்வம் காட்டிய சரத்குமாருக்கு விஜயகாந்தின் நண்பர் ராவுத்தரை சந்திக்க கூடிய வாய்ப்பு அமைந்திருக்கிறது. சரத்குமாரின் தோற்றத்தை பார்த்த ராவுத்தர் கண்டிப்பாக விஜயகாந்த் உங்களுக்கு வாய்ப்பு தருவார் என்று கூறியிருக்கிறார். இயக்குநர் ஆர்.கே.செல்வமணியையும் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார். அந்த சந்திப்பில் ராவுத்தரும் ஆர்.கே.செல்வமணியும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்களாம்

சரத்குமாரின் அர்ப்பணிப்பு
சரத்குமாருடைய தோற்றத்திற்கு மீசையை எடுத்து நடித்தால் எப்படி இருக்கும்! வில்லன் கதாபாத்திரம் இன்னும் சிறப்பாக இருக்கும். ஆனால் மீசையை எடுத்து அவர் நடிப்பாரா என்று தங்களுக்குள் தயங்கியபடி பேசிக் கொண்டிருந்தார்களாம். பின்னர் மதிய நேரம் வந்ததும் உணவு உண்டுவிட்டு வருகிறேன் என்று சென்ற சரத்குமார் உடனே தனது மீசையை மழித்துவிட்டு மீண்டும் வந்தாராம். மீசை இல்லாமல் சரத்குமாரை பார்த்த இருவரும் ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறார்கள். அவரது அர்ப்பணிப்பை பார்த்து, நீங்கள் தான் இந்தப் படத்தில் வில்லன் என்று உடனே ஒப்பந்தம் செய்தார்களாம்.


Click it and Unblock the Notifications











