என்னை ஒரு சாதிக்குள் அடைத்துப் பார்க்க வேண்டாம்... நான் சாதியற்றவன்!- இயக்குநர் ரஞ்சித்
நான் சாதியற்றவன். குறிப்பிட்ட சாதியின் ஆளாக என்னை நிறுத்துவதை ஆதரிக்க மாட்டேன் என்று கபாலி இயக்குநர் ரஞ்சித் கூறியுள்ளார்.
தான் இயக்கிய படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலித்தவர் இயக்குநர் பா ரஞ்சித். அதில் உச்சமாய் வந்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது ரஜினியின் கபாலி.
இந்தப் படத்தில் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்காக ரஜினி பேசிய வசனங்கள் உலகளவில் பெரிய விவாதத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது.

இன்னொரு பக்கம் ரஞ்சித்தை குறிப்பிட்ட சாதிக்குள் அடைத்து வைக்கும் முயற்சியையும் விஷமிகள் சிலர் கருத்து கந்தசாமிகளாக நின்று செய்து வருகின்றனர்.
அவரோ எதையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல், அனைத்து விமர்சனங்களையும் கவனித்து வருகிறார்.
ஆனால் சுய சாதிப் பெருமை பேசும் ஆள் நானல்ல... நான் சாதியை ஒழிக்க வந்தவன் என்ற நிலைப்பாட்டில் உறுதியாய் இருக்கிறார்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், "என்னை ஒரு சாதிப்பெயர் போட்டு எழுதுவதை நான் விரும்புவதில்லை. என்னை ஒரு சாதிக்குள் அடைத்துப் பார்க்க வேண்டாம். நான் சாதியை ஒழிக்க வேண்டும் என்று வந்திருக்கிறேன்.
நான் செய்யும் வேலைக்கு நான் சாதியற்றவன் என்று சொல்வதையே நான் விரும்புகிறேன்.
ஒரு குறிப்பிட்ட சாதியின் ஆளாக நிறுத்துவதை நான் ஆதரிக்க மாட்டேன். சுயசாதி பெருமிதம் எதற்கு இங்கே? அந்தப் பெருமிதம்தான் நாளடைவில் உனக்குக் கீழே இன்னொரு சாதியை ஒடுக்க நினைப்பதில் போய் முடிகிறது. ஆகவே சாதிப் பெருமை வேண்டாம்," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











