'என்னுள்ளே எம்எஸ்வி'... இளையராஜாவின் இசையஞ்சலி!
என்னுள்ளே எம்எஸ்வி.. இந்தத் தலைப்பில் ஒரு இசை அஞ்சலி நடத்தவிருக்கிறார் இளையராஜா. வரும் ஜூலை 26 ஞாயிற்றுக்கிழமை காமராஜர் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.
மறைந்த எம்எஸ் விஸ்வநாதன் மீது பெரும் மதிப்பும் அன்பும் கொண்டவர் இளையராஜா. எம்எஸ்வி என் ரத்தத்தில் இசையாக இருக்கிறார் என இரங்கல் அறிக்கை வெளியிட்ட அவர், அதையே தலைப்பாக்கி இப்போது இசையஞ்சலி செலுத்துகிறார்.

எம்எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான பாடல்களை, அவர் பாடிய பாடல்களை இளையராஜா தன் குழுவினருடன் மேடையில் பாடப் போகிறார். உடன் எஸ் பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட முன்னணி பாடகர்கள் அனைவரும் பங்கேற்கவிருக்கின்றனர்.
எம்எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான 20 பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை இசைப்பதற்கான ஒத்திகை இப்போது பிரசாத் லேபில் நடந்து வருகிறது.
வேறு ஒரு இசையமைப்பாளரின் பாடல்களை இளையராஜா வாசிப்பதும் பாடுவதும் இதுவே முதல் முறை என்பதால், ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஜூலை 26-ம் தேதி மாலை 6 மணிக்கு இந்த இசையஞ்சலி நிகழ்ச்சி தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications