'ஜுனூன்' புகழ் நடிகர் டாம் ஆல்டர் மறைவு! - பிரதமர் இரங்கல்
டெல்லி : முதுபெரும் எழுத்தாளர், நடிகர், இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவர் டாம் ஆல்டர். இவர் மேடை நடிகராகவும், சீரியல் நடிகராகவும், இயக்குனராகவும், எழுத்தாளராகவும் சினிமாவிற்கு, எழுத்துலகிற்கும் பங்களிப்பு செய்திருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் முசோரியில் பிறந்த ஆல்டர், அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவர். புனே திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். கிராந்தி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், டி.வி சீரியல்களிலும் நடித்துள்ளார். புகழ்பெற்ற நெடுந்தொடரான ஜுனூனில் டான் கேசவ் கல்சி என்ற பாத்திரத்தில் கலக்கினார் டாம் ஆல்டர்.

மேலும் மூன்று புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
கிரிக்கெட் ஆர்வலரான இவர், விளையாட்டு விமர்சகராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை இந்திய கிரிக்கெட் அணிக்கு வருவதற்கு முன்பே முதன்முதலில் டி.வி-யில் பேட்டி கண்டவர் என்ற பெருமைக்கு உரியவர்.
சமீபகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நாட்களை எண்ணிக்கொண்டிருந்த டாம் ஆல்டர் நேற்று மும்பையில் காலமானார். இவருக்கு கரொல் வட்சன் என்ற மனைவியும், ஜமி என்கிற மகனும், அஃப்ஷான் என்ற மகளும் உள்ளனர்.
இந்திய அரசால் 2008 ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இவரின் மறைவிற்கு இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.


Click it and Unblock the Notifications











