20 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சயனைடு மோகன் கதை.. முக்கிய வேடத்தில் விருது ஹீரோயின்!
சென்னை: 20 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 'சயனைடு' மோகனின் கதையில் தேசிய விருதுபெற்ற நடிகை முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கர்நாடக மாநிலம் பண்ட்வால் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார்.
ஆசிரியரான இவர், 2003 ஆம் வருடம் முதல் 2009 ஆம் வரை 20 பெண்களை கொன்றுள்ளார்.

பெண்களை மயக்கி
வனத்துறையில் பணியாற்றுவதாகவும் தனது பெயர் சுதாகர் ஆச்சாரியா என்றும் கூறி பெண்களை மயக்கி இருக்கிறார். பிறகு அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து சயனைடு கொடுத்து கொன்றுள்ளார். இவர் மீது தொடரப்பட்ட வழக்குகளில் ஐந்தில் அவருக்கு மரண தண்டனையும் மற்ற வழக்குகளில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

ஆயுள் தண்டனை
5 மரண தண்டனைகளில், இரண்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இருபதாவது வழக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது. கேரளாவின் காசர்கோடைச் சேர்ந்த 25 வயது பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாகப் பொய் சொல்லி 2009 ஆம் ஆண்டு பெங்களூரு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஒன்றாகத் தங்கிய மோகன், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

கருத்தடை மாத்திரை
அடுத்த நாள் அந்தப் பெண்ணிடம், கருத்தடை மாத்திரை என்று சொல்லி சயனைடு தடவிய மாத்திரையை கொடுத்துள்ளார். அந்தப் பெண் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதே வழியைதான் ஒவ்வொரு பெண்களைக் கொல்லவும் மோகன் பின்பற்றியுள்ளார். 20 வது வழக்கில் அவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ராஜேஷ் டச்ரிவர்
இந்நிலையில், இந்தக் கொலைகளை மையமாக வைத்து, சினிமா உருவாகிறது. இதை ராஜேஷ் டச்ரிவர் (Rajesh Touchriver) இயக்குகிறார். இவர், இன் த நேம் ஆஃப் புத்தா, தெலுங்கில், நா பங்காரு தள்ளி உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான குறும்படங்களையும் விளம்பரப்படங்களையும் இயக்கி இருக்கிறார்.

கொரோனா பிரச்னை
இந்தப் படம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாள மொழிகளில் உருவாகிறது. படத்துக்கு சயனைடு என்று டைட்டில் வைத்துள்ளனர். தொழிலதிபர் பிரதீப் நாராயணன் தயாரிக்கிறார். இதற்கிடையே இதில் பிரபல தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் ஐஜி ரேங்கில் உள்ள விசாரணை அதிகாரியாக இதில் நடிக்க இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











