பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கு எதிரான கருத்து: கே.ஜே.யேசுதாஸ் மீது வழக்குப்பதிவு!
திருவனந்தபுரம்: பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல பின்னணி பாடகரும், கர்நாடக இசைக் கலைஞருமான கே.ஜே.யேசுதாஸ் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காந்திஜெயந்தி தினத்தன்று திருவனந்தபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய விழாவில் கலந்து கொண்டு பேசிய யேசுதாஸ், "பெண்கள் ஜீன்ஸ் அணிவதனால் மற்றவர்களுக்கு தொல்லை தரக்கூடாது. எதை மறைத்து வைக்க வேண்டுமோ அது மறைத்தே இருக்க வேண்டும். இது போன்ற உடைகள் எளிமையையும், அன்பையும் பெண்களின் உயர்ந்த குணங்களாக கொண்ட இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது" என்று பேசினார்.

யேசுதாஸின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாநிலம் முழுவதும் எதிர்ப்பைப் பெற்றும் வரும் அந்தக் கருத்திற்காக, மகிளா காங்கிரஸ் சார்பில் திருவனந்தபுரத்தில் போராட்டம் நடத்தினர். பிறகு பேரணியாகச் சென்று காவல்துறையில் புகார் அளித்தனர்.
சமூக வலை தளங்களில் யேசுதாஸின் குடும்பப் பெண்கள் ஜீன்ஸ் உடைகள் அணிந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு கிண்டலடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மகிளா காங்கிரசார் அளித்த புகாரின் பேரில் கே.ஜே.யேசுதாஸுக்கு எதிராக கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











