ஆர்கே செல்வமணிக்கு எதிராக நீதிமன்றம் வாரண்ட்... என்ன காரணம்னு பாருங்க!
சென்னை : தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட துறைகளிலும் சிறப்பான இயக்குநராக வலம்வந்த ஆர்கே செல்வமணி, சமீபத்தில் நடைபெற்ற இயக்குநர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அவருக்கு வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இயக்குநர் ஆர்கே செல்வமணி
இயக்குநர் ஆர்கே செல்வமணி, ஒரு காலகட்டத்தில் சிறப்பான இயக்குநராக இருந்தார். இவரது படங்கள் சிறப்பான வெற்றியை பெற்றன. தெலுங்கிலும் இவரது படங்கள் ஹிட்டடித்தன. தொடர்ந்து படங்களை இயக்கிய இவர் நடிகை ரோஜாவை திருமணம் செய்துக் கொண்டு செட்டிலானார். சிறிது காலங்கள் படங்களை இயக்காமல் உள்ளார்.

இயக்குநர் சங்க தேர்தலில் வெற்றி
தொடர்ந்து படங்களை இயக்கவில்லை என்றபோதிலும் இயக்குநர் சங்க தேர்தலில் தனது அணியை மீண்டும் வெற்றி பெற செய்துள்ளார். சமீபத்தில் இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பாரதிராஜாவிற்கு எதிரான இவரது கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் இயக்குநர் சங்கத்தை கைப்பற்றியுள்ளது.

ஆர்கே செல்வமணிக்கு வாரண்ட்
இந்நிலையில் அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஆர்கே செல்வமணிக்கு எதிராக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2016ல் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஆர்கே செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசு ஆகியோர் பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

அவதூறு வழக்கு
இதையடுத்து அவர்கள் மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை போத்ரா தொடர்ந்தார். போத்ரா இறந்த பின்னர், இந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறார். இந்த வழக்கு விசாரணை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

வாரண்ட் பிறப்பித்த நீதிபதி
இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வரும்நிலையில் ஆர்கே செல்வமணி மற்றும் அருள் அன்பரசு ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்கள் இருவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வரக்கூடிய வாரண்டை பிறப்பித்த நீதிபதி, விசாரணையை வருகிற 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Click it and Unblock the Notifications











