சாப்பாடுக்கே வழியில்லாத நிலை.. நாடக, கூத்துக் கலைஞர்களுக்கு உதவ கருணாஸ் எம்.எல்.ஏ கோரிக்கை!
சென்னை: நாடக மற்றும், கூத்துக்கலைஞர்களுக்கு உதவ நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
சீனாவின் வுஹானில் உருவான கொரொனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது.
அமெரிக்கா, இத்தாலி, ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

எண்ணிக்கை
இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8473 ஆக உயர்ந்துள்ளது. 273 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

கருணாஸ் அறிக்கை
இந்நிலையில், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான நடிகர் கருணாஸ், நாடகம், கூத்து உள்ளிட்ட நாட்டுபுறக் கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகெங்கும் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்ற நிலையில், உலக நாடுகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

போதாத நிலை
இந்தியாவிலும் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் தமிழக மக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கத் தொடங்கி விட்டார்கள் என்பது அரசு அறிந்ததே. தமிழ்நாடு அரசு ஒவ்வொரு குடும்பங்களுக்கும் நிதி உதவிகளை உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை செய்தாலும் அது அவர்களுக்கு போதாத நிலையிலேயே உள்ளன.

கூத்துக் கலைஞர்கள்
தமிழகத்தில் குடும்ப அட்டைகள் இல்லாத எத்தனையோ குடும்பங்கள் அரசு உதவிகளை பெறாமல் இருக்கின்றன. நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கூத்துக் கலைஞர்கள் என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், எந்த உதவிகளும் பெறாமல் இருக்கின்றனர். சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலைக்கு அவர்கள் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது. ஆகவே தமிழக முதல்வர், நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புற கூத்துக்கலைஞர்கள் ஆகியோருக்கு ஊடனடியாக அரிசி உள்ளிட்ட, அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











