"மெர்சல்".. அதே பெயரில் ரிலீஸாகலாம்.. ஹைகோர்ட்டே சொல்லிருச்சு!
சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், 'மெர்சல்' படத்திற்கு தடை விதிக்கக்கோரி ஏ.ஆர்.ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார்.
இதுகுறித்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 'மெர்சல்' படத்துக்கு இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையில், தற்போது மெர்சல் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

டைட்டில் பிரச்னை
ஏ.ஆர் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்தார். தங்களது 'மெர்சலாயிட்டேன்' படத்தின் டைட்டிலைப் போன்றே வைக்கப்பட்டிருக்கும் 'மெர்சல்' டைட்டிலால் தங்களது படத்திற்கு பாதிப்பு ஏற்படும் என அந்த மனுவில் கூறப்பட்டது.

இருதரப்பு வாதம்
பல கோடி ரூபாய் செலவு செய்து தற்போது மெர்சல் படத்துக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளதால் படத்திற்கு தடை விதிக்கக்கூடாது என தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

விளம்பரம் செய்யக்கூடாது
இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் 'மெர்சல்' தொடர்பான எந்த விளம்பரங்களையும், வியாபார முயற்சிகளையும் அதுவரை செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டது. பிறகு, அக்டோபர் 6-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப் பட்டிருந்தது.
வெளியிடத் தடையில்லை
மெர்சல் தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் 'மெர்சல்' மீதான இடைக்காலத் தடையை நீக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும், 'மெர்சல்' என்ற தலைப்பிலேயே படத்தை வெளியிடவும், விளம்பரப்படுத்தவும் அனுமதி வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம். இதனால், விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











