கமல் இழந்த அத்தனையையும் மீட்டுக் கொடுத்தவர் இவர்: இப்படி பாரதிராஜா பாராட்டியது யாரைன்னு தெரியுமா?
சென்னை: தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா. சென்னையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் பாரதிராஜா, லோகேஷ் கனகராஜ், மூத்த பத்திரிகையாளர் தேவிமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், இயக்குநர் பாரதிராஜா மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசியதுடன், கமல் படத்தின் இயக்குநர் ஒருவருக்கும் புகழ்மாலை சூடியுள்ளார்.

இயக்குநர் இமயம்
தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான காரணங்களில் ஒருவர் பாரதிராஜா. கதையையும் திரைக்கதையையும் மட்டும் நம்பாமல், காட்சிகளின் வழியே தமிழ் சினிமாவை புதிய தளத்திற்கு கொண்டு போனவர் அவர். தனது படங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என, அவுட்டோர் சூட்டிங்கில் அதிக கவனம் செலுத்துவார். கிராமங்களின் அழகை மொத்தமாக திரையில் காட்டியது பாரதிராஜா தான் என்பது, ரசிகர்களின் கருத்து.

இளைஞர்களின் நாயகன்
சிகப்பு ரோஜாக்கள், முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா என புதுமையான முயற்சிகளில் பல படங்களை இயக்கி, சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ள பாரதிராஜா, இன்றும் இளம் இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் சினிமாவில் அடியெடுத்து வைக்கும் புதிய இயக்குநர்களை அரவணைத்துச் செல்வதிலும், பாரதிராஜா தனி ரகம் தான்.

பாராட்டு விழா
இந்நிலையில், தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க பாராட்டு விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா கலந்துகொண்டார். அப்போது அவருக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில், ஆளுயர மாலை அணிவித்து, மலர் கிரீடம் சூடி, நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. மேலும், பாரதிராஜாவின் 40 ஆண்டுகால திரைப்பயணத்தை குறிப்பிட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சினிமாகாரனாகவே பிறக்க ஆசை
நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா, "என் இனிய பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய பத்திரிகையாளர்களே" என அவர் பாணியிலேயே தொடங்கினார். தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்களுக்கு பாராட்டுத் தெரிவித்த அவர், தற்போது சினிமா விமர்சனங்கள் ஆரோக்கியமாக வெளியாவதாகக் கூறினார். மேலும், "நான் சினிமாவிற்கு வராமல் இருந்திருந்தால், எங்கேயோ எப்படியோ ஒரு தோட்டக்காரனாக வாழ்ந்திருப்பேன் எனவும், ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் சினிமாகாரனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

லோகேஷ் கனகராஜுக்கு பாராட்டு
தொடர்ந்து பேசிய அவர், "அப்போதிருந்த பாரதிராஜா வேறு இப்போது இருக்கும் பாரதிராஜா வேறு, இப்போது பொறுமையும் பக்குவமும் அதிகரித்துவிட்டது" என்றார். லோகேஷ் கனகராஜ் குறித்து பேசுகையில், "நான்கே படங்களில் நான்கு திசைகளையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார். விக்ரம் படம் பார்த்துவிட்டு அவரை அழைத்து பேசினேன் அவரைப் பார்த்தது கூட இல்லை விக்ரம் படத்திற்கு பிறகு தான் அவருடைய முந்தைய படங்களை பற்றி தெரிந்துகொண்டேன். ஏராளமான கனவுகளும் கற்பனைகளும் சூழ உள்ளே வந்த லோகேஷ் கனகராஜிடம் மிகப்பெரிய கலை ஞானம் உள்ளது" என பாராட்டினார்.

விக்ரம் வசூல்
மேலும், "கமல் அற்புதமான கலைஞர், சினிமாவிற்காக நிறைய இழந்துவிட்ட அவருக்கு, 'விக்ரம்' படம் தான் இதுவரை இழந்த அத்தனையையும் முதலீடாக அள்ளிக் கொடுத்துள்ளதாக" குறிப்பிட்டார். அதுமட்டும் இல்லாமல், "அதற்குக் காரணம் லோகேஷ் கனகராஜ் தான். இப்படியான இயக்குனர்கள் எல்லாம் பார்க்கும் பொழுது இவர்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது வரை அடங்கவே இல்லை" எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications











