லிங்குசாமிக்கு ஒரு நேரம் வராமலா போகும்?
ரஜினி படத்தை இயக்கப் போகிறார் என்று பேச்சுகள் அடிபடும் அளவுக்கு கமர்ஷியல் இயக்குநர் என பெயர் எடுத்தார் லிங்குசாமி. விஷால், கார்த்தி இருவருக்குமே முதல் கமர்ஷியல் ஹிட் கொடுத்து வாழ்க்கை தந்தவரும் லிங்குசாமிதான்.
ஆனால் இப்போது எல்லா ஹீரோக்களுமே லிங்குசாமியை சுற்றலில் விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
சூர்யாவை வைத்து அஞ்சான் படம் எடுத்தார் லிங்குசாமி. ரசிகர்களிடம் ஏற்பட்ட அதீத எதிர்பார்ப்பே அந்த படத்துக்கு மைனஸாக போக படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை (ஆனால் இன்றைக்கு அதே படத்தை டிவியில் பார்த்துவிட்டு அப்படி ஒன்றும் மோசமில்லை.. நல்லாதான் இருக்கு என்கிறார்கள் அன்று விமர்சனம் பண்ணவர்கள்!).

அஞ்சானுக்குப் பிறகு லிங்குசாமியின் இயக்குநர் கேரியர் மட்டுமல்லாது தயாரிப்பாளர் கேரியரிலும் ஒரு தேக்கம்.
தட்டுத் தடுமாறி ரஜினிமுருகனை ரிலீஸ் செய்தவரால், எல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் இரு படங்களை வெளியிட முடியவில்லை.
பெரிய ஹீரோக்களின் கால்ஷீட் கிடைத்தால் அதன் மூலம் நிமிர்ந்துவிடலாம் என திட்டமிட்டார். ஆனால் அவர் நம்பிய எல்லோருமே அவரை சுற்றலில் விடுகிறார்கள். பையா படத்தை இந்தியில் இயக்க நினைத்தார். தமிழில் கார்த்தியை இயக்க கால்ஷீட் கேட்டார். விஷாலை வைத்து சண்டக்கோழி பார்ட் 2 அறிவிப்பு விட்டார். தெலுங்கில் அல்லு அர்ஜுனை இயக்க தயாரானார். இவை அனைத்தும் அறிவிப்புகளோடு நிற்கின்றன. இப்போது மீண்டும் சண்டக்கோழி பார்ட் 2வுக்கே வந்திருக்கிறார்.
ஆனால் விஷாலோ அடுத்த பட கால்ஷீட்டை மிஷ்கினுக்கு கொடுத்துவிட்டார். அப்போ லிங்குசாமிக்கு?
லிங்குசாமி போன்ற இயக்குநர்களை ஹீரோக்கள் இப்படி அலைக்கழிப்பது எதிர்கால இயக்குநர்களுக்கு
ஒரு பாடம். தமிழ் சினிமாவில் கிரியேட்டிவ் ஆட்களுக்கும், டெக்னிக்கல் ஆட்களுக்கும் மதிப்பே இல்லை. ஹீரோக்கள் கைகளில் சினிமா போனதன் விளைவுதான் இது!


Click it and Unblock the Notifications











