எஸ்.பி.பி. பாட்டுக்கு வாயசைப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.. நடிகர் மைக் மோகன் உருக்கம்!
சென்னை: எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பாடலுக்கு வாயசைப்பேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என நடிகர் மைக் மோகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிரட்டி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இருந்தும் இதன் தாக்கல் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், இயக்குனர் ராஜமவுலி உட்பட பலர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர். இப்போது நடிகை நிக்கி கல்ராணியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதை அவர் சமூக வலைதளப்பக்கம் மூலம் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

கவலைக்கிடமாக
இதற்கிடையே அவர் உடல் நலம் கவலைக்கிடமாக இருப்பதாக, கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இதை அவரது மகன் மறுத்திருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அவர் விரைவில் குணமடைய இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உட்பட பலர் திரைபிரபலங்களும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

எஸ்.பி.பி.யின் ரசிகன்
இந்நிலையில், பிரபல முன்னாள் ஹீரோ மைக் மோகன், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திரையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே நான் எஸ்.பி.பி.யின் ரசிகன். பெங்களூருவில் இருந்த காலகட்டங்களில், அவரின் குரலும் பாடலும் என்னை கவர்ந்தது. அவருடைய பாடல்களைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். அவருடைய எத்தனையோ பாடல்கள் என் கல்லூரி வாழ்க்கையின் பலவற்றில் இரண்டறக் கலந்திருந்தது.

நடிகனாவேன் என்று
அப்போதெல்லாம், நான் சினிமாவுக்குள் வரவேண்டும் என்றோ நடிகனாவேன் என்றோ நினைத்ததில்லை. ஆனால் எப்போதும் எஸ்.பி.பி.யின் பாடல்கள் எனக்குத் துணையாகவும் பொழுது போக்காகவும் உத்வேகம் கொடுப்பதாகவும் இருந்தன. தெலுங்கில் எனது முதல் படமான 'தூர்ப்பு வெல்லே ரயிலு' (கிழக்கே போகும் ரயில் படத்தின் ரீமேக்) படத்துக்கு எஸ்.பி.பி
தான் இசையமைப்பாளர்.

பருவமே புதிய பாடல்
முள்ளப்புடி வெங்கடரமணா திரைக்கதையில் பாப்பு இயக்கத்தில் வெளியான அந்தப் படத்துக்கு இசையமைத்து, அனைத்து பாடல்களையும் பாடியிருந்தது எஸ்.பி.பி தான். தமிழில், மகேந்திரன் இயக்கத்தில், நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் ஜாக்கிங் செல்லும் போது வருகிற, பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடல், இன்று வரைக்கும் எல்லோருக்கும் பிடித்த பாடல். இப்படி நான் திரைத்துறைக்கு வருவேன் என்றோ எனக்குப் பிடித்த எஸ்.பி.பி.யின் பாடலுக்கு வாயசைப்பேன் என்றோ நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

எஸ்.பி.பி.யின் தீவிர ரசிகன்
என்னுடைய ஆரம்பக் கால படங்களில், ஜூலி ஐ லவ்யூ பாடலும் இளையநிலா பொழிகிறதே உள்ளிட்ட பயணங்கள் முடிவதில்லை படத்தின் எல்லாப் பாடல்களும் என, என் திரைவாழ்விலும் எனக்காக, என் படங்களுக்காகத் தொடர்ந்து ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. தொழில் முறையிலும் இப்படியான இணைப்பு வந்திருந்தாலும் நான் எப்போதுமே எஸ்.பி.பி.யின் தீவிர ரசிகன். தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார் அவர்.

பிரார்த்தனை செய்கிறேன்
என் மனமும் சிந்தனையும் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறது. எஸ்.பி.பி.யின் இனிமையான குரலில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் சாகாவரம் பெற்றவை. பாடல்கள் மட்டுமல்ல. எஸ்.பி.பி. அவர்களே அத்தகையை பண்பான மனிதர்தான். எஸ்.பி.பி. பூரண குணமடைந்து, இல்லம் திரும்பவேண்டும் என்று அவரை இதயத்தில் வைத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்கள். அன்புள்ளம் கொண்ட எஸ்.பி.பி. பூரண நலம் பெற்று, பழையபடி வலம் வரவேண்டும் என்று நானும் ஒரு ரசிகனாக பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











