திருமணத்திற்கு முன்பே விவாகரத்து…? நான் தெளிவா தான் இருக்கேன்…: திரிஷா ஓப்பன் டாக்!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான திரிஷா இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.
பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா நடித்துள்ள குந்தவை கேரக்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், காதல், திருமண வாழ்க்கை, விவாகரத்து குறித்து திரிஷா மனம் திறந்து பேசியுள்ளார்.

தனியாவா பேசலாமே!
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் நடிகை திரிஷா. ஆரம்பத்தில் ஜோடி உட்பட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த திரிஷா, சூர்யாவின் மெளனம் பேசியதே படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அமீர் இயக்கிய இந்தப் படத்தில் திரிஷாவின் நடிப்பு பலரையும் கவனிக்க வைத்தது. மெளனம் பேசியதே படத்தில் "தனியாவா பேசலாமே" என க்யூட்டாக திரிஷா பேசிய வசனம் செம்ம ட்ரெண்டிங் ஆனது. ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, ஆர்யா, விஷால் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா.

குந்தவையாக திரிஷா
மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் சோழநாட்டு இளவரசி குந்தவையாக நடித்து மிரட்டி இருந்தார் திரிஷா. அவரது கேரியரில் மிக சிறப்பான படமாக பொன்னியின் செல்வன் அமைந்துள்ளது. குந்தவையாக நந்தினி ஐஸ்வர்யா ராயை வஞ்சிக்கும் இடத்தில் மாஸ் காட்டியிருந்தார். மேலும், பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் திரிஷாவின் நடிப்பு செம்மையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிச்சயதார்த்தம்… பிரேக் அப்
திரிஷா பிஸியாக நடித்து வந்த காலக்கட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் அவருக்கு காதல் என்று கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் அதை பற்றியெல்லாம் அவர் கண்டுகொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தினார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராணாவுடன் திரிஷாவுக்கு காதல் எனவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், அது பிரேக் அப் ஆன நிலையில் தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் அதுவும் திருமணத்திற்கு முன்பே முறிந்தது.

அதில் விருப்பம் இல்லை
இந்நிலையில், திருமணம் குறித்து சமீபத்தில் பேசிய திரிஷா, "திருமணம் குறித்து பலரும் என்னிடம் கேட்கிறார்கள், சிலர் கேட்கும் விதம் எனக்கு பிடிக்கவில்லை. எப்போது திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாய் என்று சாதாரணமாக கேட்டால் பதில் சொல்லுவேன். ஆனால், திருமணம் பற்றி எனக்கு தெரியாது அது நான் யாருடன் இருக்கிறேன், யாரைச் சந்திக்கிறேன் என்பதைப் பொறுத்தது, ஒருவரை பார்த்தால் நான் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய நபர் இவர் தான் என்று நான் உணர வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

மகிழ்ச்சியாக இல்லை
மேலும், தொடர்ந்து பேசியுள்ள திரிஷா, "எனக்கு விவாகரத்தில் நம்பிக்கை இல்லை, என் திருமணம் விவகாரத்தில் முடிய விரும்பவில்லை. என்னை சுற்றியுள்ள நிறைய தம்பதிகள் தங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லாமல் இருப்பதை பார்த்திருக்கிறேன், அதில் சிலர் எனது நண்பர்கள். அவர்கள் மகிழ்ச்சியில்லாமல் இருப்பதற்கு காரணம் தவறானத் தேர்வு. அப்படிப்பட்ட திருமணம் எனக்கும் தேவையில்லை. விருப்பம் இல்லாமல் எதையும் செய்துகொள்ள மாட்டேன்" என தெளிவாக கூறியுள்ளார். இதனால் இப்போதைக்கு திரிஷாவுக்கு திருமணம் நடக்க வாய்ப்பில்லை என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications










