எருமைன்னு மணி சார் என்ன திட்டுவாருன்னு நெனச்சேன்... வந்தியத்தேவன் கார்த்தி கலகல பேச்சு
சென்னை: அடுத்த மூன்று நாட்களுக்கு எங்குமே டிக்கெட் கிடைக்காத அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புக்கிங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் தான் விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. அதனை இந்தப் படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருக்கும் கார்த்தி ஒரு பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

சிக்னல் அலெர்ட்
இயக்குநர் மணிரத்தினத்திடம் துணை இயக்குநராக பணிபுரிந்துள்ள கார்த்தி இப்போது கூட அதேபோல்தான் அவரிடம் பணிபுரிவாராம். கார்த்தியை மட்டும் மணிரத்தினம் திட்ட மாட்டார் என்று அதில் நடித்த நடிகர்கள் பல பேட்டிகளில் கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் இயக்குநரிடம் சென்று கேட்கலாமா வேண்டாமா என்று முதலில் கார்த்தியிடம்தான் கேட்பாராம். மணிரத்தினத்தை கார்த்தி ஒரு முறை பார்த்துவிட்டு கிரீன் சிக்னல் என்று சொன்னால் எந்த விதமான தயக்கமும் இன்றி சந்தேகம் கேட்கலாம். ஆரஞ்சு என்று சொன்னால் சற்று தயக்கத்துடன் சென்று கேட்க வேண்டும். சிகப்பு என்று சொன்னால் மணிரத்தினம் அருகே சென்று விடக்கூடாது. ஜெயம் ரவிக்கு ஒவ்வொரு முறை சந்தேகம் வரும்போதும் கார்த்தி இப்படித்தான் சிக்னல் கொடுப்பாராம்.

ஆதித்த கரிகாலன்
துணை இயக்குநராக இருந்தபோதே ஒருமுறை ஒரு ஒன் லைனை கொடுத்து படிக்கச் சொன்னாராம் மணிரத்னம். அதை வாங்கி படித்த கார்த்திக்கு ஒன்றும் புரியவில்லை என்றதும் வைத்துவிட்டு செல் என்று கூறிவிட்டாராம். அப்போது கார்த்திக்கு தெரியாதாம் அது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஒன் லைன் என்று. அதுமட்டுமல்லாமல் 10 ஆண்டுகளுக்கு முன்னர் அதனை படமாக்க நினைத்தபோது ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு கார்த்தியை நடிக்க கேட்டிருந்தாராம். அதன்பின்னர் விக்ரம் அந்த கதாபாத்திரத்திற்கு அப்போதே தேர்வாகி இருந்தார்.

அப்பா சொல்லித் தரல
படத்தில் ஒப்பந்தமாவதற்கு முன்னர்வரை பொன்னியின் செல்வன் நாவலை படித்ததே இல்லையாம் கார்த்தி. மேலும் அப்பா சிவகுமார் என்பதால் நான் இதனை படித்திருப்பேன் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட விஷயங்களை அப்பா சொல்லித் தர மாட்டார். அந்தக் காலத்தில் படப்பிடிப்பு தளங்களில் நடந்த சுவாரசியமான விஷயங்கள் பலவற்றைதான் எங்களிடம் கூறியிருக்கிறாரே தவிர காவியங்கள் பற்றி எங்களுக்கு ஒன்றும் சொல்லித் தரவில்லை. மேலும் நாவலை படிக்கும்போது வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் எனக்கு எம்.ஜி.ஆர் மட்டுமே கற்பனையில் தோன்றியதாக கார்த்தி கூறியிருக்கிறார்.

எருமை
ஒருமுறை ஆயுத எழுத்து படப்பிடிப்பு மேம்பாலத்தில் நடந்து கொண்டிருந்தது. அது என்னுடைய முதல் படம் என்பதால் திடீரென்று என்னை அழைத்து உனக்கு ஏதாவது புரிகிறதா என்று மணி சார் கேட்டார். புரிகிறது என்று சொன்னால் என்ன புரிகிறது என்று கேட்பார், புரியவில்லை என்று சொன்னால் எரும இது கூட புரியலையா என்று திட்டுவார். அதனால் புரிஞ்சா மாதிரி இருக்கு என்று பொலிட்டிக்கலாக ஒரு பதிலைச் சொன்னேன். அதனை கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார் என்று கார்த்தி பல தகவல்களை கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











