அரசியல் கட்சியே பகிரங்கமாக படத்தை மிரட்டுது... பிறகு சென்சார் போர்டு எதற்கு?
சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. விஜய் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள்.
படம் வெளியாவதற்கு முன்பே பல பிரச்னைகளைச் சந்தித்திருந்தது. பட டைட்டில் வழக்கில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு பிறகு நீக்கப்பட்டது. படத்தில் புறாக்களை பயன்படுத்திய காட்சிக்கு விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெறாததால் கடைசி நேரத்தில் இழுபறி நிலவியது.
சென்சார் சான்றிதழ் கடைசி நேரத்தில் பெறப்பட்டு திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளிவந்து ரசிகர்களை உற்சாகமாக்கியது. 'மெர்சல்' படத்தில் விஜய் மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாகச் சாடி வசனங்கள் பேசியிருக்கிறார்.

பா.ஜ.க-வினர் எதிர்ப்பு
'மெர்சல்' படத்தில் ஜி.எஸ்.டி குறித்தும், பணமதிப்பு இழப்பு குறித்தும் சில வசனங்கள் இடம்பெறுகின்றன. அந்த வசனங்கள் விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்காக, பொய்யான தகவல்களைச் சொல்லி மக்களைக் குழப்பும் செயல் என தமிழக பா.ஜ.க-வினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து, அந்த வசனங்களை நீக்கினால் மட்டுமே தொடர்ந்து படத்தைத் திரையிட முடியும் எனவும் எச்சரிக்கை செய்தனர்.

மெர்சலுக்கு பெருகிய ஆதரவு
'மெர்சல்' படத்துக்கு எதிராக பா.ஜ.க-வினரின் பாய்ச்சலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் பா.ரஞ்சித், 'அந்தக் காட்சிகளை மக்கள் ரசித்துப் பார்க்கிறார்கள். ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்களை நீக்கவேண்டியதில்லை' எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரும் பா.ஜ.க-வினரின் செயல் கண்டிக்கத்தக்கது எனக் கூறியிருந்தனர்.

பணிந்த மெர்சல் படக்குழு
'மெர்சல்' படக்குழுவிற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தபோதிலும், பா.ஜ.க-வினரின் வேண்டுகோளின்படி அந்தக் குறிப்பிட்ட வசனங்கள் நீக்கப்பட்டும் என தயாரிப்பாளர் முரளி தெரிவித்துள்ளார். மெர்சல் படம் வெளியாகும்போதே பல தடைகளைச் சந்திக்கவேண்டியிருந்ததாலும், போட்ட பணத்தை எடுக்கவேண்டிய கட்டாயம் இருப்பதாலும் எதற்கு வம்பு என இந்த முடிவுக்கு வந்திருக்கிறது படத் தயாரிப்புக் குழு.

சென்சார் போர்டு எதற்கு
எல்லாப் படங்களும் சென்சார் போர்டில் தணிக்கை செய்யப்பட்டபிறகுதான் வெளியாகின்றன. அப்படி வெளியானாலும், இதுமாதிரியான பிரச்னைகள் ஏற்பட்டு வசனத்தையோ, காட்சிகளையோ நீக்கும் சூழல் ஏற்படுகிறது. சென்சார் போர்டு அனுமதித்ததை மிரட்டி வாபஸ் பெற வைக்க பா.ஜ.க முயற்சிக்கிறது. எனில், சென்சார் போர்டு எனும் அமைப்பு எதற்கு எனும் கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

தணிக்கை கடுமையாகுமா
எதிர்காலத்தில் சென்சார் போர்டு இது போன்ற நெருக்குதல்களுக்கு ஆளாகும் என்ற சந்தேகம் மக்களிடையே வலுத்துள்ளது. அரசுக்கு எதிரான வசனங்களையோ, காட்சிகளையோ வைக்கும் சுதந்திரம் கூட திரைப்படங்களுக்குக் கிடையாதா? பெரிய நடிகர், பெரிய தயாரிப்பாளரின் படங்களுக்கே இந்த நிலை என்றால் சிறு பட்ஜெட் படங்களில் எப்படி அரசியல் பேச முடியும்? இப்படியே போனால், மக்களைச் சிந்திக்கத் தூண்டும் படங்கள் அனைத்தும் தடுக்கப்படும் அவலம்தான் நிகழும்.


Click it and Unblock the Notifications











