Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் 73வது பிறந்த நாள் கொண்டாடிய இளையராஜா
இசைஞானி... பண்டிதரும் படித்தவரும் பாமரரும் இந்தப் பட்டப் பெயரைப் பயன்படுத்துவது இளையராஜாவைக் குறிப்பிட மட்டும்தான்.
40 ஆண்டுகள் தமிழ் சமூகத்தை தன் இசையால் தாலாட்டிக் கொண்டிருக்கும் இந்த மாபெரும் இசைக் கலைஞருக்கு இன்று 73வது பிறந்த நாள்.
இந்த எழுபத்து மூன்று வயதிலும், எந்த இளைஞனையும் விட வேகமாகவும் வீரியமாகவும் ஓடிக் கொண்டிருக்கும் இளையராஜா, திரைத் துறையில் தடம் பதிக்கவும், தனக்கான அங்கீகாரத்தைப் பெறவும் பட்ட பாடுகள் சரித்திரம்!
அறுபதுகளின் இறுதியில் பண்ணைப்புரத்திலிருந்து தன் சகோதரர்கள் மற்றும் பாரதிராஜாவுடன் சென்னைக்கு வந்த இளையராஜா, ஆரம்பத்தில் பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரிலேயே வாய்ப்புகள் தேடினார். ஆர்டி பாஸ்கர், ராசய்யா, கங்கை அமரன் என்ற மூவர் கூட்டணிதான் பாவலர் பிரதர்ஸ்.
இந்தப் பெயரில் அவர்கள் முதல் முதலில் இசையமைத்து வெளி வந்த ரிகார்டு 'முஸ்லிம் இன்டரஸ்ட்'. அதில் பாடியவர் யார் தெரியுமா.. மறைந்த இசை முரசு நாகூர் ஹனீபா. ஆம்.. இளையராஜா முதன் முதலில் இசையமைத்து வெளிவந்த இசைத் தட்டு இதுதான்!
அதன் பிறகு சில சினிமா வாய்ப்புகள் வந்தன. எம்எஸ்வியின் உதவியாளரான கோவர்தனத்துடன் இணைந்து ஓரிரு படங்களில் பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரிலேயே இசையமைத்தனர்.
இந்த நிலையில்தான் பஞ்சு அருணாச்சலத்தின் அன்னக்கிளி பட வாய்ப்பு வந்தது. அந்தப் படத்திலும் பாவலர் பிரதர்ஸ் என்றே இசையமைக்க முடிவெடுத்திருந்தாராம் ராஜா. ஆனால் அவரது சகோதரர் பாஸ்கர், ராசய்யா என்ற தனிப் பெயரிலேயே இசையமைக்குமாறு அறிவுறுத்த, அதை ஏற்றுக் கொண்டார் ராஜா. ராஜா பின்னர் இளையராஜாவாக ஆனது எப்படி என்பதெல்லாம் இசை ரசிகர்கள் அறிந்ததுதானே.
1976-ம் ஏப்ரல் 14-ம் தேதி 'இளையராஜா' உதயமானார். அன்னக்கிளி வெளியான தினம் அது. அதன் பிறகு தமிழனின் மூச்சும் பேச்சுமாக மாறிப் போனார்.
முதல் படம் வெளியாகி மூன்றாண்டுகள் முடிவதற்குள், 100 படங்களைத் தொட்டிருந்தார் இளையராஜா. எவரும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பெரும் சாதனை இது.
இந்த 39 ஆண்டுகளில் இளையராஜா மொத்தம் 1002 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இன்றும் 30 படங்கள் பல்வேறு மொழிகளில் அவரது இசையில் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஒரு இளைஞனின் உற்சாகத்துடன், போட்டியாளர்கள் என்று யாரும் நெருங்க முடியாத தூரத்தில் இளையராஜாவின் பயணம் தொடர்கிறது.
இன்று அவருக்கு 73 வயது பிறக்கிறது. இந்த பிறந்த நாளை தனது இசையில் பாடல்கள் எழுதிய கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்களுடன் முதலில் கொண்டாட நினைத்தார் இளையராஜா. பின்னர் திடீரென முடிவை மாற்றிக் கொண்டு, தனது இஷ்ட தெய்வமான கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு நேற்று மாலையே சென்றுவிட்டார். இரவு அம்மனை தனது குடும்பத்தினருடன் வழிபட்டார். இன்று கொல்லூரிலேயே தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் இளையராஜா.
நாளை சென்னை திரும்பும் அவர், நண்பர்கள், ரசிகர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்களின் வாழ்த்துகளைப் பெறுகிறார்.