சீஷெல்ஸ் நாட்டு சுற்றுலாத் துறை தூதராக இளையராஜா நியமனம்!
சீஷெல்ஸ் தீவின் சுற்றுலாத் துறை தூதராக இசையமைப்பாளர் இளையராஜாவை நியமித்துள்ளது அந்நாட்டு அரசு.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள 155 தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய நாடு சீஷெல்ஸ். ஆப்ரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த இந்த நாட்டில் இந்தியர்கள் ஏராளமாக வசிக்கின்றனர். குறிப்பாக தமிழர்களும் உள்ளனர். சுற்றுலாதான் இந்த நாட்டின் முக்கிய வருமானம்.
சீஷெல்ஸ் தீவை முதல் முதலாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் சரத்குமார். தனது ரகசிய போலீஸ் 115 படத்தை இங்குதான் படமாக்கினார் அவர்.

சீஷெல்ஸ் தீவுக்கும் தமிழகத்துக்கும் கலாச்சார ரீதியான நல்லுறவு நிலவி வருகிறது.
சீஷெல்ஸ் அரசு இந்த ஆண்டு நடத்தும் கலை பண்பாட்டு கலாச்சார விழாவில் நான்கு நாட்கள் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினராக இந்த ஆண்டு இசைஞானி இளையராஜாவை அழைத்திருந்தது.
தலைநகர் விக்டோரியாவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இளையராஜா.
விழாவில் சீஷெல்ஸ் நாட்டின் சுற்றுலாத் துறை தூதராக இளையராஜாவை நியமிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனை இளையராஜாவும் ஏற்றுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











