ராஜாவைத் தாலாட்டும் தென்றல்.. இசைஞானிக்கு அரசின் பாராட்டு விழா.. இளையராஜா ரியாக்ஷன் என்ன தெரியுமா?
சென்னை: இசைஞானி இளையராஜா தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமா இசையின் உச்சம். 1200 படங்களுக்கு மேல் இசையமைத்து. சுமார் 10 ஆயிரம் பாடலகளுக்கு மேல் இசையமைத்து தனது வாழ்நாளில் பெரும் பகுதியை இசைக்காகத்தான் செலவிட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு பாராட்டு விழாவை தமிழ்நாடு அரசு சார்பில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விழா குறித்து இசைஞானி இளையராஜா தனது எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் லண்டனில் தனது சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்றம் செய்தார். அவர் லண்டன் புறப்படுவதற்கு முன்னரே தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இளையராஜாவின் இல்லத்திற்கே சென்று வாழ்த்து தெரிவித்தனர். லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றம் செய்த பின்னர் தமிழ்நாடு திரும்பிய இசைஞானியை தமிழ்நாடு அரசு சிறப்பாக வரவேற்றது.

இது மட்டும் இல்லாமல் தமிழ்நாடு முதலமைச்சர் இசைஞானிக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் அதுவும் அரசு சார்பில் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். ஜூன் 2ஆம் தேதி இளையராஜாவின் பிறந்த நாளிலேயே அவருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. இந்நிலையில் வரும் 13ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த பாராட்டு விழாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை வழங்குகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் பாராட்டி பேசவுள்ளார்கள்.
இசைஞானி மகிழ்ச்சி: மிகவும் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த விழாவில் பல திரை நட்சத்திரங்களும் அரசியல் பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் இந்த பாராட்டு விழா குறித்து இசைஞானி இளையராஜா தனது எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதாவது, " தமிழ்நாடு அரசு இது போல பாராட்டு விழா நடத்துவது உங்களுக்கு எந்த அளவுக்கு மகிழ்ச்சியோ, அதே அளவுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டு விழா நடைபெறும் இடத்தில் அதிகப்படியான மக்கள் கலந்து கொள்ள முடியாது. அதில் குறிப்பிட்ட அளவிலான ரசிகர்கள் தான் கலந்து கொள்ள முடியும். சினிமாகாரர்களுக்கு அரசு தரப்பில் பாராட்டு விழா நடத்தப்படுவது என்பது இதுதான் முதல் முறை. மகிழ்ச்சியாக உள்ளது " என்று தெரிவித்துள்ளார்.

ராஜாவைத் தாலாட்டும் தென்றல்: இசைஞானி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், "ராஜாவைத் தாலாட்டும் தென்றல்" - நம் பாராட்டு விழா! இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல; அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை இரசிகர்களுக்குமான பாராட்டு விழா" என்று பதிவிட்டுள்ளார். முதலமைச்சரின் பதிவு இசைஞானி ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











