அகி மியூசிக் உரிமையாளர் மீது இளையராஜா ரசிகர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் புகழுக்கும் சாதனைக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் இணையத்தில் படங்கள் வெளியிட்டு வருவதாக, அகி மியூசிக் நிறுவன உரிமையாளர் அகிலன் மீது சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இளையராஜா நற்பணி மன்றத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார்.
தனது புகாரில், "இசைஞானி இளையராஜா, உலகம் போற்றும் மாபெரும் இசை மேதை. பலருக்கும் வழிகாட்டியாக, ஞானத் தந்தையாகத் திகழ்கிறார்.
வரும் ஜூன் 2-ம் தேதி இளையராஜாவின் பிறந்த நாள். இது இசை ரசிகர்களுக்கு புனிதமான நாளாகும்.
இவரது இசையில் வந்த பாடல்களை சில ஆண்டுகளுக்கு வெளியிடும் உரிமை பெற்றதாகக் கூறிக் கொள்ளும் அகி மியூசிக் நிறுவனத்தின் அகிலன் என்பவர் வேண்டுமென்றே இளையராஜாவை அவமானப்படுத்தும் வகையில் அவர் பிறந்த நாளன்று ஆபாச, அறுவருக்கத்தக்க தலைப்புகளில் இசைக் குறுந்தகடுகளை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.
இசைக்கும் பாடலுக்கும் உரியவரான இசைஞானி இளையராவிடம் இதுபற்றி எந்த முன் அனுமதியும் பெறாமல் தன்னிச்சையாக இந்த சிடிக்களை வெளியிடத் தயாராகி வருகிறார் அகிலன்.
இளையராஜாவின் பாடல்களை தொடர்ந்து வெளியிடும் உரிமையை அகிலனிடமிருந்து ரத்து செய்வதற்கான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் அவர் இளையராஜாவின் பாடல்களை வெளியிடுவது தவறு.
மேலும் ஒரு மாபெரும் சாதனைக் கலைஞரான இளையராஜா பிறந்த நாளில், அவரை அவமானப்படுத்தும் வகையிலும் சில இசை ஆல்பங்களை அவர் பெயர், படம் பொறித்து, வெளியிடும் முயற்சியில் உள்ளார் அகிலன்.
இந்த சிடிக்கள் வெளிவராமல் தடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேஸ்புக், அகிமியூசிக்.காம் உள்ளிட்ட தளங்களில் அகிலன் பதிந்துள்ள இந்த சிடிக்களின் கவர் படங்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரை ஏற்றுக் கொண்ட கமிஷனர், இது தொடர்பான விசாரணைக்கு சைபர் க்ரைம் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே இளையராஜாவுக்கு ராயல்டி தொகை கொடுக்காமல் ஏமாற்றுவதாக அகிலன் மீது இளையராஜா சார்பில் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது.


Click it and Unblock the Notifications











