ஆபத்தான கட்டத்தில் இருக்கிறாரா இர்ஃபான் கான்? - மனைவி உருக்கமான பதிவு!
மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் நியூரோ எண்டோகிரைன் டியூமர் எனும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும் இர்ஃபான் உடல்நலம் குணமடைய பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இர்ஃபான் கான் வெளியிட்ட இந்த செய்தி அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமெரிக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இர்ஃபான் கான் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும், உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார் எனவும் செய்திகள் வெளியாகின.

நல்லவேளையாக இந்தச் செய்திகள் உண்மையில்லை எனத் தெரிவித்துள்ளார் இர்ஃபான் கானின் செய்தித் தொடர்பாளர். அவர் மேலும் கூறுகையில், "நண்பர்களும், ரசிகர்களும் அவரது உடல்நலம் குணமாக தொடர்ந்து பிரார்த்தியுங்கள். சமூக வலைதளங்களில் அவரது உடல்நிலை பற்றிய வீண் வதந்திகளைப் பரப்பவேண்டாம்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
"எனது கணவர் ஒரு போர்வீரனைப் போல இந்த நோய்க்கு எதிராகப் போராடுகிறார். அவருக்கு எதிரான தடைகளை நம்பிக்கையுடன் அழகாகக் தகர்த்து வருகிறார். உங்கள் அனைவரின் அக்கறையைம், பிரார்த்தனையையும் நான் தாழ்மையாகக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்" என இர்ஃபான் கானின் மனைவி சுடாபா சிக்தர் ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











