இரவின் நிழல் 25வது நாள், “கடப்பது கருங்கடலில்… நன்றி ரசிகாஸ்”: நச்சென்று நன்றி கூறிய பார்த்திபன்
சென்னை: பார்த்திபன் இயக்கத்தில் வெளியான 'இரவின் நிழல்' படம் திரையரங்குகளில் வெளியாகி இன்று 25வது நாள்.
உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்ற பெருமையை 'இரவின் நிழல்' தட்டிச் சென்றது.
இந்நிலையில், இரவின் நிழல் படம் வெளியாகி 25 நாட்கள் ஆனதையொட்டி, ரசிகர்களுக்கு பார்த்திபன் வித்தியாசமாக நன்றி கூறியுள்ளார்.

புதுமைகளின் பூங்காவனம்
'புதிய பாதை' படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமான பார்த்திபன், தனது முதல் படத்தின் தலைப்பை போன்றே, புதிய பாதையில் பயணித்து வருகிறார். தான் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு புதுமையை செய்துகொண்டே இருப்பது இவரது வழக்கம். அதேபோல் நடிப்பிலும், வழக்கமான பாணியை விட்டுவிட்டு, அடுக்கு மொழி வசனம், எதுகை மோனை என ரசிகர்களை அசர வைப்பார்.

ஒத்த செருப்பு செய்த மாயம்
பார்த்திபன் இயக்கிய 'ஹவுஸ்ஃபுல்', 'குடைக்குள் மழை', 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' ஆகிய படங்கள் அவரின் புதிய முயற்சிகளுக்கு நல்ல பலனை கொடுத்தது. அதனையடுத்து அவர் இயக்கிய 'ஒத்த செருப்பு' இன்னும் கொஞ்சம் தரமான சம்பவத்தை அரங்கேற்றியது. பார்த்திபன் மட்டுமே திரையில் தோன்றி, கதையை முன்னும் பின்னுமாக நகர்த்திச் சென்றது, ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுத்தது. அதன் விளைவாக இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது.

மகுடம் சூடிய இரவின் நிழல்
வித்தியாசமாக எதையாவது செய்துகொண்டே இருப்பதில் கை தேர்ந்த பார்த்திபன், அடுத்ததாக இன்னும் பெரிய முயற்சிக்கு ரெடியானார். அவரின் இந்த துணிச்சலுக்கு முதலில் தோள் கொடுத்து நின்றது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். இருவரும் இணைந்த பின்னர் 'இரவின் நிழல்' படத்துக்கு பெரிய எதிர்பர்ப்பு ஏற்பட்டது. அதுவும் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்றதும், ரசிகர்களின் ஆர்வம் இன்னும் உச்சம் தொட்டது.

வெற்றிகரமான 25வது நாள்
இறுதியாக எல்லா எதிர்பார்ப்புகளையும் கடந்து படத்தின் மேக்கிங் வீடியோவுடன் வெளியான 'இரவின் நிழல்' படத்தை, ரசிகர்களும் வரவேற்றனர். ஆனாலும், ப்ளுசட்டை மாறன் ஏற்படுத்திய சர்ச்சை, பட்டாசாய் வெடிக்க, கடைசியில் அதற்கும் ஒருமுடிவு வந்தது. இந்நிலையில், 'இரவின் நிழல்' படம் திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்கள் ஆனதையொட்டி, பார்த்திபனும் ரஹ்மானும் கவ்பாய் தொப்பியுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்த போட்டோவை பார்த்திபன் தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.

அடுத்த படத்துக்கும் புதுசா ஒரு ஐடியா
'இரவின் நிழல்' படத்திற்கு ஏராளமான விருதுகள் உறுதி என விமர்சகர்கள் கூறிவரும் நிலையில், அவர் தனது அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார். அதற்காக பார்த்திபன் வித்தியாசமாக போட்டோ ஷூட் எடுத்து, அதற்கு இன்னும் புதுமையாக கேப்ஷனும் கொடுத்து ட்விட்டரை தெறிக்கவிட்டுள்ளார். "ஆடி ஆடி ஆடி ஆடி கூழ் ஊற்றி, Cool-ஆய் ஆடி ஆடி நாடி நரம்பெல்லாம் எனர்ஜி நல்லா கூடி கூடி கூடி ரெடி ஆகிறான் ப்ளடி அடுத்தப் படத்திற்கு. எப்டி?" என்ற பார்த்திபனின் இந்த ட்விட்டர் பதிவு, இப்போதே ரசிகர்களை தலை சுற்ற வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











