என்னது...பாரதிராஜா கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா?...அதிர்ச்சியில் கோலிவுட்
சென்னை : பிரபல டைரக்டரும், நடிகருமான பாரதிராஜா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, ஒரு வார காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறி உள்ள தகவல் கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே திரையுலகை சேர்ந்த பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோலிவுட், பாலிவுட், டோலிவுட், மல்லுவுட் என பாரபட்சமின்றி கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் பல படங்களின் ஷுட்டிங் வேலைகள் பாதியிலேயே நிற்கின்றன. அந்த வரிசையில் தற்போது பாரதிராஜாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சூப்பர் ஹிட் டைரக்டர்
1977 ம் ஆண்டு, கமல்-ரஜினி-ஸ்ரீதேவி நடித்த சூப்பர் ஹிட் படமான 16 வயதினிலே படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானவர் பாரதிராஜா. ரஜினி, கமல், சிவாஜி என பல டாப் ஹீரோக்களை வைத்து படம் இயக்கியதுடன், ஏராளமான நடிகர், நடிகைகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா தான். இவர் 6 தேசிய விருது, 4 தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது, 2 தமிழக அரசு விருது, 2 நந்தி விருதுகளை வென்றுள்ளார்.

பாரதிராஜா போட்ட ட்வீட்
தெலுங்கு, இந்தியிலும் பல படங்களை இயக்கிய பாரதிராஜா, பல படங்களில் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார். கடைசியாக ராக்கி என்ற திரில்லர் படத்தில் நடித்திருந்தார். தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார் பாரதிராஜா. இந்நிலையில் இன்று திடீரென, தான் கொரோனாவில் இருந்து மீண்டிருப்பதாகவும், நலமுடன் வீடு திரும்பி இருப்பதாகவும், நலம் விசாரித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி பதிவிட்டதுடன், அறிக்கை ஒன்றையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதியா
பாரதிராஜா தனது அறிக்கையில், கொரோனா தொற்கு ஏற்பட்டு ஒரு வாரகாலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். என் நண்பன் டாக்டர் திரு.நடேசன் அவர்களின் நேரிடை கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, நலமுடன் இன்று இல்லம் திரும்பி விட்டேன். திரு.நடேசன் அவர்களுக்கும், பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த ஏனைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தமிழக அரசு, அரசு மருத்துவர்கள், மாநகராட்சி ஊழியர்கள், என் உடல் நிலை குறித்து தொடர்ந்து தொலைபேசி, ஊடகங்கள் வாயிலாக நலம் விசாரித்த நண்பர்கள், இயக்குனர்கள், திரைத்துறை நண்பர்கள், உறவுகள், அரசியல் பெருமக்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசங்களை அணிந்து, பொதுவெளியில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஆடிப்போன கோலிவுட்
பாரதிராஜாவின் இந்த ட்வீட்டை பார்த்து கோலிவுட்டே ஆடிப் போய் உள்ளது. இவ்வளவு பெரிய டைரக்டரான பாரதிராஜாவிற்கு எப்போது கொரோனா தொற்று ஏற்பட்டது, அவர் எப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எந்த தகவலும் வெளியே வரவில்லையே. அவரோ, அவரது குடும்பத்தினர்களோ இது பற்றிய தகவலை வெளியிடவில்லையே என அனைவரும் அதிர்ந்து போய் உள்ளனர். பொதுவாக திரையுலகை சேர்ந்த யாருக்காவது கொரோனா தொற்று என்றால் அவர்கள் சோஷியல் மீடியாவில் தெரிவிப்பார்கள். மீடியாக்களும் பரபரக்கும். ஆனால் பாரதிராஜா விஷயத்தில் எந்த தகவலும் எப்படி தெரியாமல் போனது என அனைவரும் குழம்பிப் போய் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











