ரஜினி, விஜய்யை விட்டால் ஆளே இல்லையா... தமிழ் படங்கள் திணறுவதற்கு இது தான் காரணமா?
சென்னை : டப்பிங் செய்யப்பட்டு, தமிழில் ரிலீஸ் செய்யப்படும் படங்கள் பல நூறு கோடிகளில் வசூலை குவித்து வருகின்றன. அசால்டாக பல சாதனைகளை தூக்கி சாப்பிட்டு வருகின்றன. ஆனால் நேரடியாக தமிழில் எடுக்கப்படும் படங்கள் தியேட்டர்களில் சில வாரங்களை தாக்கு பிடிப்பதே பெரும்பாடாகி வருகிறது.
பெரிய நடிகர்களின் படங்களை தவிர மற்ற படங்களின் வசூல் சராசரி என்ற அளவிலேயே இருந்து வருகின்றன. இதற்கு என்ன காரணம் என்பது பற்றி நெட்டிசன்கள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் வசூல் சாதனை, கோடிகளில் வசூல் என்றாலே ரஜினி, விஜய்யை விட்டால் வேறு ஆளே இல்லையா என கேட்டு வருகிறார்கள்.

ரஜினி, விஜய் விட்டா ஆளே இல்லையா
சமீப காலமாக பான் இந்தியன் படங்களின் வரத்து அதிகரித்து வருகிறது. அப்படி பிற மொழிகளில் எடுக்கப்பட்டு, தமிழில் டப் செய்யப்பட்ட படங்கள் வசூல் சாதனை படைத்து வருகின்றன. பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் சாப்டர் 2, புஷ்பா போன்ற படங்களின் வசூலை பார்க்கையில் தமிழ் படங்களின் வசூல் சுமார் ரகம் தான். ரஜினியின் 2.0 மட்டுமே இதுவரை தமிழில் 700 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டி உள்ளது. அதற்கு பிறகு விஜய் படங்கள் தான் அதிகபட்சமாக 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்கின்றன.

100 கோடி வசூலே சாதனையா
ரஜினி, விஜய்யை தொடர்ந்து தற்போது அஜித் நடித்த வலிமை 250 கோடி, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் 100 கோடி, சிம்பு நடித்த மாநாடு 100 கோடி வசூல்களை தாண்டி உள்ளன. தமிழ் சினிமாவில் 100 கோடி வசூலே மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்கள் மிக சாதாரணமாக 1000 கோடி வசூலை கடந்துள்ளன. இதற்கு என்ன காரணம், வேற்று மொழி படங்கள் தமிழில் வசூலை குவிக்க முடிகிறது என்றால் தமிழ் படங்களால் ஏன் அந்த சாதனையை எட்ட முடியவில்லை. இது பற்றிய இனியாவது தமிழ் நடிகர்கள் சிந்திப்பார்களா என பலர் கேட்டு வருகின்றனர்.

வசூல் பாதிக்க இதுதான் காரணமா
தமிழ் சினிமாக்கள் வசூலை பெற திணறுவதற்கு காரணமாக நெட்டிசன்கள் சொல்வது, ஆர்ஆர்ஆர் படம் 3 ஆண்டுகள் உழைப்பை கொட்டி எடுத்தார்கள். பாகுபலி 6 ஆண்டுகள் உழைத்து எடுக்கப்பட்ட படம். ஆனால் தமிழ் நடிகர்கள் ஒரு வருடத்திற்கு 2 முதல் 3 படங்களில் நடிக்கிறார்கள். அவசரமாக படத்தை முடிக்க வேண்டும் என நினைப்பதால், படத்தின் தரம் குறைந்து விடுகிறது. அது வசூலை பாதிக்கிறது.

வசூல் தான் முக்கியமா
முன்பெல்லாம் ரஜினி, கமல் ஆகியோர் ஆண்டுக்கு ஒரு படம் மட்டுமே நடித்தார்கள். அப்படி அவர்கள் உழைப்பை கொட்டி, பார்த்து பார்த்து படத்தை செதுக்கியதால் ஒரு படம் வந்தாலும் அது தரமான படமாக அமைந்து, பிளாக் பஸ்டர் படமாக மட்டுமின்றி, எளிதில் மறக்க முடியாத படமாகவும் அமைந்தன. தமிழ் சினிமாக்களின் வசூல் பாதிக்கப்படுவதற்கு டைரக்டர்களும் முக்கிய காரணம். படத்தின் தரத்தை விட வசூலிலேயே டைரக்டர் முதல் ரசிகர்கள் வரையிலான கவனம் இருப்பதால் தமிழ் படங்களில் மாற்றம் வருவதற்கான வாய்ப்பே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

நல்ல படங்களை யாரு பார்க்குறா
மற்றொரு தரப்பினர் கூறுகையில், தமிழ் சினிமாவில் சார்பட்டா பரம்பரை, டாணாக்காரன், ஜெய்பீம், கடைசி விவசாயி போன்ற நிறைய தரமான நல்ல படங்கள் வரத் தான் செய்கின்றன. ஆனால் இந்த படங்கள் எல்லாம் ஓடிடியில் மட்டுமே ரிலீஸ் செய்யப்படுகின்றன. தியேட்டருக்கு வருபவர்கள் பிரம்மாண்டத்தை மட்டுமே எதிர்பார்ப்பதால், தரமான படங்கள் பல வந்ததே பலருக்கு தெரியாமல் போய் விடுகிறது என்ற கருத்தை முன் வைக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











