ஆரண்ய காண்டம், கோச்சடையானைத் தொடர்ந்து 'மாயவனாக' மாறும் ஜாக்கி ஷெராஃப்
சென்னை: சி.வி.இயக்குநராக அறிமுகமாகும் மாயவன் படத்தில், பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் வில்லனாக நடிக்கவுள்ளார்.
தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அட்டக்கத்தி, பீட்சா, முண்டாசுப்பட்டி, சூது கவ்வும் மற்றும் இன்று நேற்று உட்பட பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்தவர் சி.வி.குமார்.
மேலும் பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ராம், ரவிக்குமார் என்று ஏராளமான இயக்குநர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த பெருமையும் இவரையே சேரும்.

இதுநாள்வரை வெற்றித் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவைக் கலக்கிய சி.வி.குமார், தற்போது மாயவன் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு வில்லனாக இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப்பை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஏப்ரல் 4 முதல் ஜாக்கி ஷெராஃப் மாயவன் படப்பிடிப்பில் இணைந்து கொள்கிறார்.
ஆரண்ய காண்டம், கோச்சடையான் படங்களைத் தொடர்ந்து 3 வது முறையாக, ஜாக்கி ஷெராஃப் ஒப்பந்தமாகி இருக்கும் தமிழ்ப்படம் 'மாயவன்' என்பது குறிப்பிடத்தக்கது.
சி.வி.குமார் இயக்கினாலும் திரைக்கதை மற்றும் வசனங்களை நலன் குமாரசாமி எழுதுவது, மாயவன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











