கோவை மாணவி பாலியல் வன்கொடுமை.. அந்தப் பெண் மீதுதான் தவறாம்.. ஜேம்ஸ் வசந்தன் சர்ச்சை கருத்து
சென்னை: கோவையில் மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் தனது காதலனுடன் விமான நிலையத்துக்கு பின்புறம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது மூன்று பேர் அடங்கிய கும்பல் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த குரூரர்களை காவல் துறையினர் நேற்றிரவு துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்கள். இவ்விவகாரம் குறித்து பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் பதிவு கண்டனத்தை பெற்றிருக்கிறது.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், "கோவை விமானநிலையத்தின் பின்புறம் இந்தக் கொடுமை நிகழ்ந்ததாக அந்த இடத்தைத் தொலைக்காட்சியில் காண்பித்தபோது அந்தப் பெண் மீதும், அவளது ஆண் நண்பன் மீதும் கோபம் வந்தது. பகலிலேயே ஆள்நடமாட்டமற்ற திகிலான அந்த இடத்திற்கு இரவு நேரத்தில் அவர்கள் போனது தவறு.
இரவில் எப்படி ஒருவனுடன் செல்லலாம்?: முதலில், அந்தப் பெண் தவறு. இவ்வளவு தனிமையான இடத்திற்கு எப்படிப் போகலாம்?பகலில் ஊருக்கு நடுவில் தெருவில் நடந்துபோகும்போதே கைபேசியைப் பிடுங்கிகொண்டு ஓடுவதும், கழுத்துச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுவதும் சாதாரணமாகிவிட்ட காலத்தில் இந்த இடத்துக்கு, இரவில், எப்படி ஒருவனுடன் செல்லலாம்?

இழந்ததை மீட்டு தர முடியும?: இரண்டாவது, அந்தப் பையன் தவறு. அவ்வளவு தனிமையான இடத்துக்கு இரவில் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு போனால், அவளைக் காப்பாற்றக்கூடிய திராணி இருக்கவேண்டும். நிச்சயமாக அந்த இடத்தை இவன்தான் அவளுக்கு அறிமுகப்படுத்தி இருக்கமுடியும். இப்போது அவள் இழந்ததை அவன் மீட்டுத்தர முடியுமா?
இனி அழுது பயனில்லை: அந்த மூன்று முட்டாள்களுக்கும் ஆளுக்கு மூன்று நிமிடங்கள் ஒரு அரைகுறை இன்பம் கிடைத்திருக்கும். ஆனால் அவர்களது வாழ்க்கையே முடிந்துபோனதல்லாவா இப்போது! இனி அழுது பயனில்லை. ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொள்வார்கள். மனம்நொந்து அழுவார்கள். பெற்றோரையும் மற்றோரையும் நேருக்குநேர் பார்க்கமுடியாமல் குனியும் அவர்கள் தலை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிமிராது.
இதைப்போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர் யாரும் சிக்காமல் தப்பிக்கவேமுடியாது. மாட்டித்தான் ஆவார்கள். இதை வாசிக்கிறவரில் இதைப்போன்ற வக்கிர சிந்தனையுள்ளவனும் இருப்பாய். எதிர்காலத்தில் இதைப்போல எதையாவது செய்துவிட்டு வருத்தப்படாதே. பெண்ணின் நலனைக்குறித்து கூட நீ சிந்திக்கவேண்டாம். உன் நலனுக்காக இதைப்போன்ற செயல்களில் ஈடுபடாதே. நீ சிறையில் தனிமையில் வருந்தி வருந்தி அழுதாலும், உன் வாழ்க்கை உனக்குத் திரும்பக் கிடைக்காது. தவறான நண்பனைத் தவிர்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











